search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95567"

    • ஒவ்வொரு மாதமும் போடும் பட்ஜெட்டில் நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும்
    • மளிகைப் பொருட்களுக்காக ஒதுக்கும் பணத்தில் சிறு தொகையை நிச்சயம் சேமிக்க முடியும்.

    தற்போதைய பொருளாதாரச் சூழலில், எவற்றில் எல்லாம் சிக்கன நடவடிக்கையை கையாள முடியும் என்று திட்டமிடுவது அவசியமானது. ஒவ்வொரு மாதமும் போடும் பட்ஜெட்டில் நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும் விஷயங்களில், மளிகைப் பொருட்கள் வாங்குவதும் ஒன்று. திட்டமிட்டு சில விஷயங்களை செயல்படுத்தினால், மளிகைப் பொருட்களுக்காக ஒதுக்கும் பணத்தில் சிறு தொகையை நிச்சயம் சேமிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    * சத்துள்ள உணவுகளைத் தேர்வு செய்வது பணத்தை மிச்சப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள் போன்றவை சத்துள்ள உணவுகளை விட விலை அதிகமாகவே இருக்கும்.

    * மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு சிறிது நேரம் செலவழித்து சரியான பட்டியல் தயார் செய்வது முக்கியமானது. இதன் மூலம் தேவையற்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

    * செய்தித்தாள்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சலுகைகளை ஆராய்ந்து, அவற்றுக்கேற்ப பொருட்களை வாங்கலாம்.

    * சமைத்த மற்றும் உடனே சாப்பிட தயாராக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்குவதை விட, முழு தானியங்களை வாங்கி பயன்படுத்துவது பட்ஜெட்டுக்கு நல்லது.

    * வீட்டில் தயாரிக்க முடிந்த உணவுப் பொருட்களை, வெளியில் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

    * ஒவ்வொரு பொருளாக வாங்குவதை விட, தேவையானப் பொருட்களை மொத்தமாக வாங்குவதே சிறந்தது. பொருட்களை வாங்குவதற்கு அங்காடிக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும், கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளால் நம்மை அறியாமல் தேவையற்ற பொருட்களையும் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

    * வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்த முடிந்த காய்கறிகளை நாமே விளைவிப்பது, பணத்தை மிச்சப்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

    * வாரத்தில் இரண்டு முறை குளிர்சாதனப் பெட்டியை முழுவதுமாக பார்த்து அதில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை முதலில் உபயோகப்படுத்துங்கள். உங்களுக்கே தெரியாமல் சில பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வைத்து மறந்து விட்டிருக்கலாம்.

    * பசியாக இருக்கும் போது அங்காடிக்குச் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

    * இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு உணவு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, நமது அருகில் கிடைக்கும் சத்தான உணவுகளை வாங்குவது சிறந்தது. குளிர்பானங்கள், சத்து பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை வாங்குவதையும் தவிர்க்க முயலுங்கள்.

    * அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அவற்றை அதிகமாக வாங்கி பயன்படுத்தலாம்.

    * மளிகைப் பொருட்கள் வாங்கும்போது, அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை கவனிக்க மறந்து விடாதீர்கள்.

    • அளவுக்கு அதிகமாக சமைத்து உணவை குப்பையில் கொட்டுவது தவறாகும்.
    • தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    சிக்கனம் என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானது. நாம் சிக்கனமாக வாழ்ந்தால் நமது சந்ததியினர் சிறப்பாக வாழ்வார்கள். இதில் பெண்களின் பங்கு முக்கியமானது. குடும்பச் செலவுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த உடைகள் மற்றும் நகைகள் அணிந்து இருந்தால்தான் சமுதாயத்தில் மதிப்பு என்று கருதி, சில பெண்கள் அவற்றுக்காக அதிகமாக செலவு செய்வார்கள்.

    பெண்களின் திறமை, அவர்களின் பேச்சு, பண்பான அணுகுமுறை போன்றவற்றால் தான் சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற முடியும். கால மாற்றத்தால் அழகு நிலையங்கள் பெண்களின் வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அழகு பராமரிப்புக்காக அதிகமாக செலவு செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். அவற்றை தவிர்த்து இயல்பான அழகுக்கு தேவையான பராமரிப்புகளை மட்டும் செய்துகொள்ளலாம்.

    கணவனும்-மனைவியும் பணிக்குச் செல்லும் பல குடும்பங்களில், சமையலில் சிக்கனம் தவறிப்போகும். நேரம் இல்லாத காரணத்தால், மாதத்தில் பல நாட்கள் வெளியில் வாங்கி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். விலை உயர்ந்த காய்கறிகள், சமையல் பொருட்கள் தான் உடலுக்கு நல்லது என நினைத்து, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவார்கள். அவற்றை விட நமக்கு அருகில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் பல மடங்கு சத்து கொண்டதோடு, விலையும் குறைவாக இருக்கும்.

    வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அவர்களுக்கு தகுந்தபடி சிக்கனமாக உணவு தயாரிப்பது அவசியம். அளவுக்கு அதிகமாக சமைத்து உணவை குப்பையில் கொட்டுவது தவறாகும். சிக்கனத்தை கடைப்பிடிக்கத் தவறினால், பணப்பிரச்சினைகள் உருவாகி, மனப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகள் கேட்டதை எல்லாம் உடனே வாங்கி கொடுப்பது தவறு. சிக்கனமாக இருப்பதை குழந்தைகள் உணரும்படி பக்குவமாக எடுத்துச் சொல்வது பெற்றோரின் கடமையாகும்.

    தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். புதிது புதிதாக விற்பனைக்கு வரும் விலை உயர்ந்த செல்போன்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது சிக்கனத்தின் அடிப்படையாகும். சிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சிக்கனம் சீரான வாழ்க்கைக்கு உதவும். கஞ்சத்தனம் யாரும் மதிக்காத நிலையை உண்டாக்கும். இதை உணர்ந்து தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, சிக்கனத்தை கடைப்பிடித்தால் சிறப்பாக வாழலாம்.

    • மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து பேசினார்.
    • மோடி பிரதமர் ஆன பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மத்திய அரசு பட்ஜெட் குறித்த தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட மகளிர் அணி தலைவி ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சுதா, மாநில செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட பொருளாளர் அமுதா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து கூட்டத்தில் பேசினர்.

    மேலும் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம், மோடி பிரதமர் ஆன பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளதாகவும், தொலைநோக்கு பார்வையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் சீர்காழி நகர செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் வெற்றிலை முருகன், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் செல்வ முத்து, இளைஞர் அணி தலைவர் ஹரி, அருள்அழகன், உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • பணத்தை செலவு செய்யும்போது எமோஷன்களை தவிர்க்கவேண்டும்.
    • ஒவ்வொரு மாதமும் வரவு செலவுகளை கண்டறிந்து பட்ஜெட் தயார் செய்ய வேண்டும்.

    பணம் சம்பாதிப்பது எளிது, ஆனால் செல்வந்தராக கடைசி வரை இருப்பது தான் கடினம் என்பார்கள். அதற்கு எதிர்காலத்தை எண்ணி, திட்டமிட்டு பணத்தை சேமிப்பது என்பது அவசியமானதாகும். அந்த சேமிப்பு குறித்து பார்ப்போம்:-

    பட்ஜெட்

    ஒவ்வொரு மாதமும் வரவு செலவுகளை கண்டறிந்து பட்ஜெட் தயார் செய்ய வேண்டும். பட்ஜெட் போட்டு பழகும்போதுதான் பணம் தேவையில்லாமல் எங்கு கசிகிறது?அதை எப்படி தடுக்கலாம்? என தெரிந்துகொள்ள முடியும். தற்போது ஈசியாக பட்ஜெட் போட மொபைல் ஆப்கள் வந்துள்ளன. அதைகூட நாம் பயன்படுத்தலாம்.

    தேவை

    எது தேவையோ அதற்கு மட்டும் செலவிட்டு, தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும். மற்றவர்களிடம் ஒரு பொருள் இருக்கிறது என்பதை மட்டும் நாம் பார்த்து அதை வாங்க நினைக்கக்கூடாது. அந்த பொருள் நிஜமாகவே நமக்கு தேவைப்படுகிறதா? அதனால் பயன் கிடைக்குமா? என்பதை நன்கு சிந்தித்து அதனை வாங்குவதற்கு செலவு செய்ய வேண்டும்.

    எமோஷன்

    பணத்தை செலவு செய்யும்போது எமோஷன்களை தவிர்க்கவேண்டும். அதிக மகிழ்ச்சி, பேராசை, பதற்றம், கவலை போன்ற எமோஷனலான சூழல்களில் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்யும்போது வீண் செலவுகளை தவிர்த்து சேமிக்க முடியும்.

    முதலில் சேமிப்பு

    பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு மாதமும் செலவு செய்த பணத்தில் மீதமுள்ளதை சேமிக்கின்றனர். அது தவறானது. ஒவ்வொரு மாதமும் வருமானம் வந்தவுடன் அதில் ஒரு தொகையை எடுத்து முதலில் சேமித்துவிட்டு, மீதமுள்ள பணத்தை செலவு செய்ய வேண்டும். அதுவே சிறந்தது என்பது நிபுணர்களின் அறிவுரை.

    • தொழில் தொடங்குவதற்கு முதலில் தன்னம்பிக்கை அவசியம் தேவை.
    • தொழில் மீது அசாத்தியமான நம்பிக்கையை வையுங்கள்.

    தொழில் தொடங்கி இந்த சமுதாயத்தில் பெரிய ஆளாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. ஆனால் அந்த தொழில் தொடங்குவதற்கு முதலில் தன்னம்பிக்கை அவசியம் தேவை. நாம் செய்ய போகும் தொழிலை சிறப்பாக நடத்துவதற்கு பணம் தேவை. அந்த பணத்தை வைத்து தான் தொழில் தொடங்க முடியும். அந்த பணத்தை எப்படி புரட்டுவது? என்று யோசித்து, யோசித்தே சிலர் தாங்கள் தொழில் தொடங்க நினைக்கும் எண்ணத்தை விட்டு விடுவார்கள். உங்கள் எண்ணங்களை வளமாக்க தான் அரசும், பல்வேறு வங்கிகளும் தொழில் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அந்த கடன் உதவிகளை பெறுவதற்கு நாம் தயாராக வேண்டும்.

    உறுதியான நம்பிக்கை

    தொழில் தொடங்குவதற்காக வங்கி மேலாளரை அணுகி நாம் செய்ய போகும் தொழிலை எடுத்து கூறி கடன் கேட்கிறோம். கடன் கொடுக்கும் வங்கி மேலாளர், முதலில் நம்மை சோதிப்பது நம்பிக்கை தான். தொழிலில் வெற்றி கிடைக்காவிட்டால் கடனை எப்படி கட்டுவீர்கள் என்று. ஆனால் நம் நிச்சயம் இந்த தொழிலில் சாதித்து காட்டுவேன் என்று உறுதி கூற வேண்டும். நீங்கள் அப்படி கூறினாலும், உங்களை மாதிரி எனக்கு தெரிந்த நபர் ஒருவர் தொழில் செய்தார். அதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அவர் வேறு ஒரு தொழில் செய்து நஷ்டத்தை ஈடுகட்டினார். அது போல் உங்களுக்கு வேறு தொழில் செய்கிற திட்டம் இருக்கிறதா? என்று கேட்பார்கள்.

    இதற்கும் நீங்கள், தாங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழிலின் செயல்பாடுகளை விளக்கி கூறுங்கள். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் கடன் தொகையை மாதந்தோறும் தவணை மாறாமல் கட்டி விடுவேன் என்று உறுதி கூறுங்கள். உங்கள் உறுதி தான் கடன் தரும் வங்கி மேலாளருக்கு அசாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்தும். அவர் சொல்கிறபடி நான் மேற்கொள்ளும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் வேறு தொழில் செய்து கடன் தொகையை அடைத்து விடுவேன் என்று கூறுவது நம் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும். எனவே நீங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழில் மீது அசாத்தியமான நம்பிக்கையை முதலில் வையுங்கள். அது வங்கி மேலாளரை ஈர்த்து விடும்.

    திட்ட மதிப்பீடு

    நீங்கள் செய்யப் போகிற தொழில் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான திட்டத்தை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.

    இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து தொழில் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் உற்சாகத்துடன் பேசலாம்.

    அடமானமில்லாத கடன்

    அதாவது ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி திட்டத்தில் கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.

    அடமான கடன்

    ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.

    முதலீடு தொகை எவ்வளவு?

    தொழில் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்த தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் நம்மிடம் சொந்த பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் ரூ.4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் தொழில் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கி அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். எனவே உங்கள் தொழிலில் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.

    வங்கிகளை எப்படி அணுகுவது?

    ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை (எஸ்.எம்.இ. கிளை) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

    தேவையான ஆவணங்கள்

    அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், தொழில் நடைபெறும் இடத்துக்கான முகவரிச்சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), தொழில் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!

    • நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன.
    • தபால்துறை சார்பில் நாமக்கல் கோட்டத்தில் ஒரே நாளில் 1,700 செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    நாமக்கல்:

    இந்திய அஞ்சல் துறை சார்பில், அம்ரித் பெக்ஸ் பிளஸ் 3 திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலமாக செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் 25 குழந்தைகளுக்கு, நடராஜபுரம் துணை அஞ்சலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கியதற்கான பாஸ் புத்தகத்தினை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் பிள்ளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நடரா ஜபுரம் துணை அஞ்சலக அதிகாரி சங்கீதா அஞ்சலக இன்சூரன்ஸ் வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், வணிக வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், சேமிப்பு பிரிவு அலுவலர் அனிதா, அழகு நகர் நல சங்க துணைத் தலைவர் மணி ராஜா, செயலாளர் ராமசாமி, பொருளாளர் வீராசாமி, கந்தசாமி, அன்பு மற்றும் ஈசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். தபால்துறை சார்பில் நாமக்கல் கோட்டத்தில் ஒரே நாளில் 1,700 செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்கா

    ணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • சேமிப்பு ஒரு சிறந்த பழக்கமாகும்.
    • சிறு சேமிப்பின் மூலம் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். நாம் சேமித்து வைக்கும் சிறிய தொகையும் ஏதாவது ஒரு சமயத்தில் நிச்சயம் கைகொடுக்கும். சேமிப்பு மற்றும் சிக்கனத்தின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ந் தேதி 'உலக சேமிப்பு தினம்' கொண்டாடப்படுகிறது. சேமிப்பு இல்லாத வாழ்க்கை, கூரை இல்லாத வீட்டுக்கு சமம். அத்தியாவசிய தேவைகளை தாண்டி பணத்தை சேமித்து வைப்பது, எதிர்கால பயன்பாட்டுக்கு பக்கபலமாக இருக்கும்.

    ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தை பெற்ற உடன், செய்யும் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். வருமானத்தில் குறைந்தது 10 சதவீதத்தையாவது கட்டாயம் சேமிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கும் சேமிப்பின் அவசியத்தை சிறு வயதிலேயே சொல்லி கொடுக்க வேண்டும். சிறு சேமிப்பின் மூலம் நம்முடைய பணம் வீணாகாமல் இருப்பதோடு நம்முடைய பொருளாதார நிலை உயர்வுக்கும் வழிவகுக்கிறது. சிறு சேமிப்பின் மூலம் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமையும். சேமிப்பு ஒரு சிறந்த பழக்கமாகும். இப்பழக்கமானது ஆடம்பர செலவுகளை குறைக்க கற்று தருகின்றது. சிக்கனத்தை கடைப்பிடிக்க வழிவகை செய்கின்றது.

    மனிதர்கள் இளம் வயதில் அதிகமாக உழைக்க இயலும், ஆனால் முதுமையில் உழைக்க உடலில் சக்தி இருக்காது. எனவே உழைக்கும் காலத்தில் சிறுதொகையை சேமித்து வைப்பதால் பிற்காலத்தில் அது உதவும். எறும்புகள் கூட தனக்கான உணவை கோடையில் சேமித்து வைக்கும், பின்பு மழை நாட்களில் சேமித்த உணவை உண்டு உயிர் வாழுகிறது. ஓர் எறும்புக்கு கூட சேமிப்பின் முக்கியத்துவம் தெரிகிறது.

    அதுபோல் மனிதர்களாகிய நாம் சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன. அரசு சிறு சேமிப்பு நிலையங்கள், அரசு வங்கிகள், அஞ்சலகங்கள் ஆகியவற்றில் பணத்தை சேமிக்கலாம். நாம் சேமிக்கும். பணம் நமக்கு வட்டியுடன் கிடைக்கிறது. சேமிப்பு பழக்கமும், சிக்கனமும் இருந்தால்தான் ஒருவர் வாழ்வில் உயரத்தை அடைய முடியும்.

    சிக்கனம் சிறந்த பண்புகளுள் ஒன்று. சேமிப்பு பிற்கால வாழ்வை ஒளி மயமாக்கும். சேமிப்பு வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது. எனவே அனைவரும் சிக்கனத்தை பின்பற்றி சேமிக்க பழகுவோம்.

    • பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை.
    • பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது.

    தங்கத்தின் பயன்பாடு நம் நாட்டில் மிக அதிகம். குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம்.

    ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது. மேலும் திருமணம் உள்ளிட்ட குடும்பத்தாரின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை. இதனால் என்னவோ.. இப்போது தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது.

    முதலீடு செய்ய வேண்டிய நிலத்தில் காசை போடவேண்டும். அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

    ஈ.டி.எப் திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.

    இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம்.

    இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப் திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது. இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப் திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது.

    தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர்.

    பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிறபோது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடையமுடிகிறது.

    தற்போது இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்குமெண்டும் அனுப்பி வைப்பார்கள்.

    ஆனால் இந்த முதலீட்டை நீங்கள் திரும்பப் பெற நினைத்தால் அடுத்த இரண்டு தினங்களில் அப்போதைய தங்கத்தின் மதிப்பிற்கான பணத்தை பரஸ்பர நிதி நிறுவனம் உங்களுக்கு அளித்து விடுகிறது. இதில் அவர்களுக்கு ஒரு சிறிய லாபம் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்கள் எதுவுமே கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.

    சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும். அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம்.

    ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது.

    • 'நேரம்' என்பதை பணத்தின் இன்னொரு பரிமாணமாக பார்க்க வேண்டும்.
    • உங்கள் ஒரு நாள் சராசரி செலவை திட்டமிடுங்கள்.

    புது ஆண்டில் நிதி சார்ந்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் கவனமாக இருக்க வேண்டும். வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களை பெருக்கி, தடைகளை ஆராய்ந்து நீக்குபவர்களிடம்தான் செல்வம் பெருகும். அந்த வகையில் உங்கள் நிதி சார்ந்த நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

    1. காப்பீடு திட்டங்களில், குறிப்பாக மருத்துவ காப்பீடு திட்டங்களில் உங்களையும், குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்வது சிறந்த முடிவு. எதிர்பாராத நேரத்தில் உண்டாகும் சில மருத்துவச் செலவுகளை கையாள்வதற்கு இது உதவி செய்யும். மருத்துவ காப்பீடு திட்டத்தை எடுப்பதற்கு முன்பு அதன் நிறை-குறைகளை ஆராய்ந்து பார்த்துவிட வேண்டும்.

    2. முதலில் உங்கள் ஒரு நாள் சராசரி செலவை திட்டமிடுங்கள். சில நாட்கள் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக அல்லது குறைவாக செலவு செய்ய நேரிடலாம். இருப்பினும் உங்கள் ஒரு நாளுக்கான வரவு-செலவு எவ்வளவு என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் கண்ணுக்குத் தெரியாமல் செய்யும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த முடியும்.

    3. அலைபேசி, இருசக்கர வாகனம் மற்றும் இதர வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும்போது தேவையற்ற அல்லது தேவைக்கு அதிகமாக உள்ள எந்தப் பொருளிலும் பணத்தை வீணாக்குவது, நிதி அபாயங்களில் உங்களை சிக்க வைக்கலாம்.

    4. சூரிய சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்க ஆர்வம் கொள்வது நல்லது. வாங்கும் போது சற்று அதிகம் செலவழிக்க நேர்ந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    5. 'பட்ஜெட்' என்ற ஒன்றை பெயர் அளவில் வைத்துக் கொண்டு, தங்களின் விருப்பப்படி செலவு செய்பவர்கள் அதிகம். நீங்கள் திட்டமிடும் 'பட்ஜெட்', நடைமுறையில் கடைப்பிடிக்க சாத்தியமாக இருக்க வேண்டியது அவசியம்.

    6. உங்கள் செலவுகள் போக மீதம் இருக்கும் வருமானத்தை ஆக்கப்பூர்வமாக கையாள வேண்டும். வங்கி சேமிப்பு, முதலீடு, பகுதி நேர தொழில் செய்வது போன்றவற்றுக்கு அந்தப் பணத்தை பயன்படுத்தலாம்.

    7. மாதத் தவணைகள், கடனுக்காக செலுத்தப்படும் வட்டிகள் ஆகியவற்றை கவனமாகக் கையாள வேண்டும். முடிந்தவரை வட்டியை குறைக்க வேண்டும் அல்லது கடனை முழுவதாக அடைக்க வேண்டும். இல்லையெனில், ஓட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றும் கதை போல் வருமானம் வீணாகும்.

    8. 'நேரம்' என்பதை பணத்தின் இன்னொரு பரிமாணமாக பார்க்க வேண்டும். பணத்தை சேமிக்க முயற்சிப்பவர்கள் நேரத்தை சேமித்து வையுங்கள். இழந்த பணத்தைக்கூட சம்பாதித்து விடலாம். ஆனால் இழந்த நேரத்தை திரும்ப பெற முடியாது. எனவே புது ஆண்டில் நேர மேலாண்மையை கட்டாயம் பின்பற்றுங்கள். இதனால் ஆக்கப்பூர்வமான பல செயல்களை செய்ய முடியும்.

    • வீடு வாங்கும்போது வீட்டின் உள்ளே நன்கு கவனித்துப் பாருங்கள்.
    • சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம்.

    எல்லா வீடுகளும் ஒன்றுபோல் தோன்றினாலும் வெவ்வேறானவை. சில சமயங்களில் ஒரே மாதிரி தோன்றும் வீடுகளின் விலை வேறுபட்டிருக்கும். வீடு வாங்கும்போது அதிக விலை கொடுத்தாலும் சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம்.

    எனவே வீடு வாங்கும்போது வீட்டின் உள்ளே நன்கு கவனித்துப் பாருங்கள். வீட்டின் வெளிப்புறத்தைப் போல் உள்புறமும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருக்கிறதா என பரிசோதியுங்கள். வீட்டின் உள்ளே வெளிச்சமும் காற்றும் தேவையான அளவில் வருவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள். அறைகளுக்கு அவசியமாக ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வீட்டிற்குள் சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் நிறைய வர வேண்டும்.முறையான வெண்டிலேஷன் அமைந்துள்ள வீட்டில் அநாவசியமாக விளக்கை ஒளிரவிட வேண்டிய தேவை இருக்காது.

    குளிர்சாதன வசதியை அதிகம் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இருக்காது. தேவையான இடங்களில் தண்ணீர் கிடைக்க போதுமான குழாய் வசதி அமைத்திருக்க வேண்டும். மின் சாதனங்களுக்கான சுவிட்ச் போர்டுகளும் சுவிட்சுகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் வீட்டிற்கு குடிபோகும் முன் கவனிக்க வேண்டியவை..பெரும்பாலும் வீட்டை தேர்வு செய்யும் முன்னர் தரையில் டைல்ஸ், மார்பிள், கிரானைட் அகியவற்றில் எது பதிக்கப்பட்டு இருக்கிறது? என்பதை எல்லாம் உடனே கவனித்துவிடுவோம்.

    ஆனால் குளியலறையில் தேவையான வாஷ் பேசின் உள்ளதா? என்பது போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்த பின்பே வீட்டை வாங்க வேண்டும். சில ஆயிரங்கள் குறைவு என்பதால் உள்புறம் திருப்திகரமாக அமைக்கப்படாத வீட்டை வாங்குவது சரியல்ல. ஏனெனில் அவற்றைப் புதிதாக உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
    • விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த புதுப்பள்ளி மழை முத்துமாரியம்மன் ஆலயத்தில் தானம் அறக்கட்டளை கீழையூர் கிழக்கு வட்டார வயலகம் கீழையூர் கிழக்கு வட்டார வயலக பரஸ்பரம் கீழையூர் நெய்தல் ஜீவிதம் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனம் சார்பில் 18 ஆண்டு பொதுக்குழு கூட்டம் முப்பெரும் விழா நடைபெற்றது

    கூட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது முன்னதாக விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது

    இதில் ஜீவித வட்டார பொருளாளர், திருமதி இளவரசி வரவேற்புரை வழங்கினார், வட்டார. ஒருங்கிணைப்பாளர் மோ.அபிரகாம் ஸ்டான்லி அவர்கள், மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன் அவர்களும், எதிர்கால திட்டம், வட்டாரம் ஒரு பார்வை என்னும் தலைப்பில், கொள்கை மாற்றம் குறித்து விளக்கவுரை யாற்றினார்.

    சிறப்பு விருந்தினர்களாக, விழுந்தமாவடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், கிளை மேலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார், சிறப்பு விருந்தினர்களுக்கு, நினைவுப்பரிசு வழங்கப்ப ட்டது, சிறந்த குழுவிற்கு கேடயம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை, வட்டார பணியாளர் கார்த்திகேசன், செய்திருந்தார்.

    • நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது.
    • சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30-ந் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது. ஒருவர் தனது சராசரி தேவைகளுக்கு பிறகு சேமிக்கும் சிறிய பணமும் சேமிப்பாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் சேமிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய அஞ்சலகங்களின் சேமிப்பு கணக்கு சிறந்ததாகும்.

    அஞ்சலகத்தில் எல்லா பிரிவினர், வயதினருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை. இதுவரை அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறாத பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிய முறையில் கணக்கு தொடங்கலாம். எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வேறு திட்டத்தில் சேர்ந்து கூடுதல் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும், கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அனைத்து பெரிய தபால் அலுவலகங்களிலும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு கவுன்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×