search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    ராஜபாளையம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    நெல்லை மாவட்டம் அருளாச்சியை சேர்ந்த அரவிந்த்(வயது24),அவரது தம்பி ராஜதுரை(21), இவர்களது மாமா மகன் சசி(20), நண்பர் விஸ்வநாத பிரதீப் ஆகிய 4 பேரும் பக்கத்து கிராமமான டி.ராமநாதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது காரை வாங்கி கொண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதியபேருந்துநிலையம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் அண்ணாத்தே படத்தின் இரவு காட்சிக்கு சென்றனர். அங்கு படம் பார்த்துவிட்டு நள்ளிரவு ஒருமணி அளவில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை விஸ்வநாதபிரதீப் ஓட்டினார்.

    தென்காசிரோட்டில் சோலைசேரி மண்ணோடி கண்மாய் அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து 3 முறை உருண்டு தலைகுப்புற கவிழந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட சசி சம்பவ இடத்திலேயே பலியானார்.மற்ற மூவரும் பலத்த காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் ஊரக காவல்நிலைய சகறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல் அருகே சென்டர் மீடியனில் கார் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்தவர் பிரபு (வயது 29). கார் டிரைவர். இவர் சசிகலா (39) என்பவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். நேற்று நள்ளிரவு ஊராளிப்பட்டி பிரிவில் கார் வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரின் பெரும் பகுதி சேதமடைந்தது. அவ்வழியே வந்தவர்கள் படுகாயமடைந்த பிரபு மற்றும் சசிகலாவை மீட்டு திண்டுக்கல் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வெளியூருக்கு செல்லும் மக்களும் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்களும் அதி வேகத்தில் வந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    பல நேரங்களில் உயிரிழப்பும் நடந்து வருகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்த சாலையில் பல விபத்துகள் இது போல நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அடிக்கடி முகாமிட்டு அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    அவினாசியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கோவையில் உள்ள உருக்கு ஆலையில் எந்திரங்கள் இயக்குபவராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி தமிழ்செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா(3) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்றார். அங்கு விழா முடிந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிள் அவினாசி சாலையில் இன்று அதிகாலை வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானான். 3 பேர் பலத்த காயங்களுடன் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வியும் உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக குழந்தை நித்திகா உயிர் தப்பியது. மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் மனோஜ்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (வயது41) உள்பட 15 பேர் ஒரு வேனில் சென்னையில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். வேனை அதே பகுதியை கதிரேசன் என்பவர் ஓட்டி சென்றார்.

    துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று இரவு 9 மணி அளவில் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் வேன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் தொழிற்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று வேன்டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரம் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த செல்வகுமார், விஜயா(52), லட்சுமி(42), ராணி(52) இலஞ்சியம்(50), கனக வள்ளி((50), கலைசெல்வி(40)வேன் டிரைவர் கதிரேசன் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    திண்டுக்கல் அருகே சுற்றுலா வந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வடமதுரை:

    சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூரை அடுத்த கீரனூர் பிரிவில் கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை கடந்து தாறு மாறாக ஓடியது. பின்னர் எதிர்திசையில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    விபத்தில் கரை ஓட்டிவந்த கிருஷ்ணகிரி மாவட்டம் மாதம்பள்ளியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது27), காஞ்சிபுரத்தை சேர்ந்த மனோஜ் (27), தேனியை சேர்ந்த முத்துகாமு (21), கிருஷ்ணகிரியை சேர்ந்த பாலாஜி (20) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மற்ற 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    குண்டல்பட்டியில் இன்று உப்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
    தருமபுரி

    சேலத்தில் இருந்து உப்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அந்த லாரி இன்று காலை தருமபுரி அடுத்துள்ள குண்டல்பட்டி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது.  

    இதில் லாரியில் இருந்த உப்பு மூட்டைகள் சாலையில் சிதறியது. இதில் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதிக்கோண்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.

    தேவகோட்டை:

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ளது பாறசாலை. இந்த பகுதியில் வசிக்கும் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் தமிழக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சுற்றுலாவாக புறப்பட்டனர். பாறசாலையை சேர்ந்த ஷியாம்குமார் (வயது 28) பஸ்சை ஓட்டினார்.

    ஊட்டி, பழனி பகுதி களுக்கு சென்றுவிட்டு நேற்று சுற்றுலா பஸ் வேளாங்கண்ணிக்கு வந்தது. அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ள தாவூத்து மாதா கோவிலுக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை அந்த பஸ் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேகம்புதூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள புலிக்குட்டி கிராம பகுதியில் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் அங்கிருந்த கால்வாய் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருவேகம் புதூர் போலீசார் விரைந்து சென்றனர். காயம் அடைந்த சந்திரன் (48), சுதாகரன் (60), இருதயம்மாள் (80), வினிஸ் (14), தங்கையன் (55), அருண்போஸ் (24), ஸ்டீபன் (45), சிராஜ் (31), அஜி (32), அப்புக்குட்டன் (78), ஜெயக்குமாரி (55), லீசாமோல் (29), சரசா (56) உள்பட 16 பேர் மீட்கப்பட்டு காளையார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்படடது. இவர்களில் சந்திரன், சுதாகரன், இருதயம்மாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொ) மனோகர், திருவேகம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமணிசாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் புளிய மரத்தில் மோதிய விபத்தில் பெண் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    நெல்லை மாவட்டம் சிவகிரியில் மாரிமுத்து என்பவர் இறந்து விட்டார். அவரது இறப்பை அறிந்து திருப்பூரில் இருக்கும் உறவினர்கள் துக்க வீட்டிற்கு செல்ல திருப்பூரிலிருந்து கார் மூலம் கிளம்பினர். காரை சரவணகுமார் (வயது 42) ஓட்டினார்.

    காரில் சரவணகுமாரின் சகோதரர் சந்திரசேகர் (38) அவரது மனைவி சீதாலட்சுமி (33), ரஞ்சித் (10), அமிர்தா (7),மற்றும் கோதை நாச்சியார் (45), பாண்டீஸ்வரி (28), சேது அம்மாள் (65) ஆகியோர் இருந்தனர்.

    இன்று காலை ஆம்னி கார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் தனியார் கல்லூரி அருகே வரும் போது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் காரில் வந்த அனைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் சேது அம்மாள் (65) என்பவர் மட்டும் உயிரிழந்தார்.

    காயமடைந்த அனைவரையும் கிருஷ்ணன் கோவில் போலீசார் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    காலை 6½ மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தினால் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணன் கோவில் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்னி காரை ஓட்டி வந்த சரவணகுமாரும், அவரது சகோதரர் சந்திரசேகரும் திருப்பூரில் டைனிங் நிறுவனம் நடத்துவதாக விசாரணையில் தெரியவந்தது.

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர்கள் வெங்கடேசன் (21), பாஸ்கர்.

    இவர்கள் 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ரவிக்குமார் ஓட்டினார்.

    காஞ்சீபுரம் - அரக்கோணம் சாலையில் புதுப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து காளஹஸ்தி நோக்கி சென்ற தனியார் பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார், வெங்கடேசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இந்த விபத்தில் பாஸ்கர் படுகாயம் அடைந்தார். அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து தொடர்பாக காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துறையூர் ஆருகே அரசு விடுதி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலையில் பழங்குடியினர் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதி கட்டிடம் சேதம் அடைந்து இருந்ததால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அந்த விடுதி கட்டிடத்தை இடித்துவிட்டு தற்போது, ரூ.2கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிய விடுதி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு விடுதி கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் விடுதியின் முதல்தளம் கட்டும் பணியில் கண்ணனூர் சமத்துவபுரத்தை சேர்ந்த கொத்தனார் மணிபாரதி (வயது 42) மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    முதல்தளத்தில் 20 அடி உயரத்தில் நின்று மணிபாரதி குறுக்கு சுவர் கட்டிக்கொண்டிருந்தபோது, திடீரென்று சுவர் இடிந்து கீழே விழுந்தது. அப்போது அங்கு நின்று சுவர் கட்டிக்கொண்டிருந்த மணிபாரதியும், அவருடன் நின்று பணியாற்றிய துறையூர் நத்தகாடு விநாயகர் தெருவை சேர்ந்த சங்கீதா (32) ஆகியோரும் கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மணிபாரதி இறந்தார். சங்கீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் மாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆனந்த் தலைமையில் பொதுமக்கள் துறையூர்-திருச்சி சாலையில் கூடினர். பழங்குடியினர் மாணவிகள் விடுதி கட்டிடம் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு கட்டப்பட்டு வருகிறது. இதனால் தான் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. எனவே தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விடுதி கட்டவேண்டும் என வலியுறுத்தி மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை எடுத்து, அவர்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். 30 பேர் படுகாயமடைந்தனர்.
    அன்னவாசல்:

    மணப்பாறையில் இருந்து அன்னவாசல் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம், தாவூதுமில் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 48) ஓட்டினார். கண்டக்டராக புதுக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் இருந்தார். அந்த பஸ், அன்னவாசல்-புதுக்கோட்டை சாலையில் பெருஞ்சுனை என்ற இடத்தில் சென்ற போது, எதிரே லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது பெருஞ்சுனையில் இருந்து அன்னவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கருப்பையா மகன் மதியழகன் (24), லாரியை முந்திச் செல்ல முயன்றார். இதைக்கண்ட பஸ் டிரைவர், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ்சை திருப்பிய போது சாலையின் ஓரத்தில் பஸ் கவிழ்ந்தது. இருப்பினும் பஸ் மீது, மோட்டார் சைக்கிள் மோதியதில், மதியழகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர். பின்னர் அவர்களை இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்து வந்த ஆம்புலன்ஸ்களில் ஏற்றி, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவி செய்தனர். பின்னர் மதியழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கிணத்துக்கடவில் மொபட் மீது வேன் மோதிய விபத்தில 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கிணத்துக்கடவு:

    கோவை மேட்டுப் பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி வயது (49). இவரும் திருப்பூர் மாவட்டம் உடுமலை கணபதிபாளையத்தை சேர்ந்த தொழிலாளி மாசிலாமணி (35), கிணத்துக்கடவு கொண்டம்பட்டி மதுரைவீரன் கோவில் தெருவைசேர்ந்த ராஜன் (45), கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுச்சாமி (55) ஆகிய 4 பேரும் ஒரே மொபட்டில் கிணத்துக்கடவில் இருந்து கொண்டம்பட்டியில் உள்ள ராஜன் வீட்டிற்கு கிளம்பினார்கள். மொபட்டை மாசிலாமணி ஓட்டினார்.

    கொண்டம்பட்டி ரோட்டில் சென்றபோது எதிரேவந்த வேன் மொபட் மீது மோதியது. இதில் மாரிச்சாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானர். படுகாயம் அடைந்த ராஜன், ஆறுச்சாமி, மாசிலாமணி ஆகியோர் உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர்குமார், ராஜன். ஏட்டு ரத்தினசாமி ஆகியோர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கோவை, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஆறுச்சாமி, மாசிலாமணி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கிணத்து க்கடவு போலீசார் வழக்குபதிவு செய்து வேன் டிரைவர் நெகமம் சேரிபாளையத்தை சேர்ந்த மகேஸ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×