என் மலர்
நீங்கள் தேடியது "tag 117352"
தாராபுரம்:
தாராபுரம் மின்சார வாரிய நிர்வாக கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் மின்வாரிய கோட்டம் மூலனூர் பிரிவு அலுலகத்தில் நிர்வாக காரணத்தினால் மே மற்றும் ஜூன் மாத கணக்கீடு செய்ய இயலவில்லை. இதனால் கணேசன்புதூர், எம்.ஜி.வலசு, எம். காளிபாளையம், சமுத்திரவலசு பகுதி மின்நுகர்வோர் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஏற்கனவே மார்ச் மாதம் கட்டிய மின்கட்டணத் தொகையையே மே மாதத்திற்–கும், ஏப்ரல் மாதம் கட்டிய மின்கட்டணத் தொகையையே ஜூன் மாதத்திற்கும் செலுத்தலாம்.
அதே போன்று தாராபுரம் கோட்டத்தில் கள்ளிவலசு பிரிவு அலுவலகத்தில் நிர்வாக காரணத்தினால் மே மாதம் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. அதனால் மே மாத கணக்கீட்டு பணியில் கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை. ஆகவே மின்நுகர்வோர்கள் மார்ச் மாதம் கட்டிய மின்கட்டணத் தொகையையே மே மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 43 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக சுங்க சாவடிகளில் வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளிலும் தரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

சுங்க சாவடி கட்டண உயர்வு குறித்து மதுரையைச் சேர்ந்த வணிகர் எஸ்.அருண் கூறியதாவது:-
மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு முறை செல்ல வாகன சுங்க கட்டணம் ரூ.800 செலுத்தி வருகிறோம். சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி வரும்.
ஆம்னி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. பெருங்களத்தூர்- செங்கல்பட்டு வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. தினமும் 1 லட்சம் வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன.
டீசல் கட்டணம் உயர்வு, சுங்க கட்டண உயர்வால் ஆம்னி பஸ்களை நஷ்டத்தில் இயக்கி வருகிறோம். சுங்க சாவடிகளில் சுங்க கட்டண உயர்வால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #TollGate
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்போன்களை கொண்டு செல்ல கூடாது என்று ஐகோர்ட்டு கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது.
மேலும் கோவில் நிர்வாகம், பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பின்னர் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் 5 கோபுர வாசல்களிலும் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க தனி அறைகள் அமைக்கப்பட்டு, அங்கு தற்காலிக ஊழியர்களை நியமித்தது. மேலும் செல்போன் ஒன்றை பாதுகாக்க அங்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் கோவிலுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
இதற்கிடையே மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மீனாட்சி அம்மன் கோவிலில் இதுநாள் வரை செல்போன் கட்டணமாக எவ்வளவு ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகத்திடம் கேள்வி கேட்டு இருந்தார். அதில் நிர்வாகம் கொடுத்த தகவல் படி கடந்த 10 மாதங்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் மூலம் ரூ.1 கோடியே 99 லட்சத்து 10 வசூலாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கட்டணத்தை ரூ.5 ஆக குறைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #MaduraiMeenakshiTemple

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், தமிழகத்திற்கு ரெயில் மூலம் அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளாவில் மழை வெள்ளத்தின்போது நிவாரணப் பொருட்களுக்கான சரக்கு கட்டணத்திற்கு விலக்கு அளித்ததுபோல், தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்சியர்களுக்கு நன்கொடையாளர்கள் அனுப்பும் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami #RailwayMinister
நீலகிரி மலை ரெயில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரெயிலாக உள்ளது. இதனால் நீலகிரி மலைரெயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய மலை ரெயில் அந்தஸ்து வழங்கி உள்ளது. இதன்காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எப்போதும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
நீலகிரி மலை ரெயில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கும், பின்னர் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கும் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதுதவிர குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்படுகிறது.
முகரம் பண்டிகையையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறையாக உள்ளதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் குடும்பத்துடன் பயணிக்கின்றனர்.
அப்போது இயற்கை காட்சிகளை ரசிப்பதுடன், அதனை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். நேற்று குன்னூர் ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் போலீசார் சுற்றுலா பயணிகளை வரிசையில் நிறுத்தி பின்னர் மலை ரெயிலில் ஏற அனுமதித்தனர்.
தற்போது குன்னூர்-ஊட்டி இடையே 2-ம் வகுப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரெயில்வே அதிகாரிகள் தற்போது இருமடங்காக உயர்த்தி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே பயணிக்க நபர் ஒன்றுக்கு ரூ.15-ம், ஊட்டி-குன்னூர் இடையே பயணிக்க ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் புதிய கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு வருவாய்த்துறை, பஞ்சாயத்துத்துறை, தமிழ்த்துறை, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன.
இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள துறைகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் மின் இணைப்புக்கான கட்டணம் பல மாதங்களாக கட்டப்படாமல் இருந்தது. ரூ.15 லட்சம் வரை கட்டண பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கு மின்வாரியம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை.
மின்சார கட்டணம் கட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று மாலை மின்வாரிய ஊழியர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அந்த கட்டிடத்திற்கான மின் இணைப்பை துண்டித்தனர். உடனே அங்கிருந்த அதிகாரிகள் மின் ஊழியர்களிடம், மின் இணைப்பை ஏன் துண்டித்தீர்கள் என கேட்டனர்.
அதற்கு அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பல மாதங்களாக மின் கட்டணம் கட்டப்படாமல் இருந்தது. அதனால் மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றனர்.
மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கிய பல துறைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்று 2-வது நாளாகவும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. பணிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர்கள் அனைத்தும் செயலிழந்தன. ஊழியர்கள் பணியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகிறார்கள். #tamilnews
சென்னையில் சுற்றுலாதளமாக திகழும் மெரினா கடற்கரைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக மெரினா கடற்கரை உட்புற சாலைகளில் கார்கள், வேன்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது.
தற்போது கார்கள் போன்ற கனரக வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 ஆக உயர்த்தவும், மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக வாகனங்கள் நிறுத்தத்தை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியும், காவல்துறையும் இணைந்து சென்னை நகரில் 375 இடங்களில் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்த கமிட்டி ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த கமிட்டி எந்தெந்த இடங்களில் பார்க்கிங் வசதியை அமைக்கலாம் என்று ஆய்வு செய்து அறிக்கை தருவார்கள். அதன் ஒரு கட்டமாகவே மெரினா, எலியட்ஸ் உள்பட கடற்கரைகளில் கார்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தவும், மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது.
இந்த நிலையில் தற்போது குடியுரிமை கட்டணம் 1,012 பவுண்ட்ஸ் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தகுதியுள்ள ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை பெறாத இங்கிலாந்து இளைஞர்களால் உயர்கல்வியில் நடைமுறை தாக்கங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.
மேலும் குடியுரிமை பெறாமல் வளரும் குழந்தைகள் பாதுகாப்பின்மையை உணர்வார்கள். தனது நண்பர்களுக்கு இருக்கும் உரிமை தனக்கு இல்லாததை மெதுவாக புரிந்து கொள்வார்கள்.
இது அவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்த கட்டண உயர்வானது மிக குறைந்த வருமானம் ஈட்டும் புலம் பெயர்ந்த குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கும்.
அவர்களை கடனாளியாக்கி பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். #UK #citizenship
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதுவரை ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த தீர்ப்பின் காரணமாக மருத்துவக் கல்விக்கட்டணம் 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.50 லட்சம் வரை மிச்சமாகும். ஆனால், உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலக் கல்விக் கட்டணமே மிகவும் அதிகம் என்பது தான் பெரும்பான்மையான கல்வியாளர்களின் கருத்து ஆகும்.
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையில் எந்தவிதமான கட்டமைப்பு சார்ந்த வித்தியாசங்கள் இல்லை. ஒரு காலத்தில் தனியார் கல்லூரிகளாக இருந்தவை தான், மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறின. இவை எப்படி, எதற்காக, யார் மூலம் இந்த தகுதியை பெற்றன என்பது மிக நீண்ட பின்னணியாகும்.
ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக்கட்டணத்திற்கும், நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களின் கல்விக் கட்டணத்திற்கும் இடையில் பெரும் வித்தியாசங்கள் உள்ளன. தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக் கல்விக்கட்டணமாக ரூ.2.85 லட்சம் முதல் ரூ 4 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும் ரூ.12.50 லட்சம் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் 65 சதவீதம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன. அதன்படி பார்த்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சராசரிக் கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.6.22 லட்சம் முதல் ரூ.6.97 லட்சம் என்ற அளவில் தான் உள்ளது. இது ஓரளவு நியாயமானதாகும்.
அதேநேரத்தில் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கல்விக் கட்டணம் குறைந்தது ரூ.18 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூ.22.50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படும் வரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஆண்டுக் கட்டணமாக ரூ.6 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இதுதவிர ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை நன்கொடையாக வசூலிக்கப்பட்டு வந்தது.
நீட் தேர்வுக்குப் பிறகு மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கையில் எடுத்துக் கொண்டதால் நன்கொடை வசூலிப்பதை நிறுத்திவிட்ட நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள், அதை ஈடு செய்யும் வகையில் ரூ.6 லட்சமாக இருந்த ஆண்டு கல்விக் கட்டணத்தை ரூ.22.50 லட்சமாக உயர்த்திவிட்டன. ஒரே ஆண்டில் கல்விக் கட்டணத்தை 4 மடங்கு உயர்த்தியது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய அரசோ, இந்திய மருத்துவக் குழுவோ கேட்கவில்லை. மாறாக, எந்த அடிப்படையும் இல்லாமல் மருத்துவக்கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளித்தன.
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவும், இந்திய மருத்துவக் குழுவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். இந்திய மருத்துவக் குழு அனுமதித்தக் கட்டணங்களை பல்கலைக்கழக மானியக் குழு குறைக்காது. இதனால் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணம் எந்த வகையிலும் குறையாது. அதனால், தமிழகத்திலுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படுவது தான் மிகவும் சரியானதாக இருக்கும்.
இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்தக் குழுவால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது போன்ற ஓரளவுக்காவது நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க முடியும்; இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
எனவே, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். அத்துடன், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படுவது போன்ற இட ஒதுக்கீட்டையும் பின்பற்ற ஆணையிட வேண் டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #ramadoss
சென்னையில் மெட்ரோ ரெயில் பயணத்தை பயணிகளிடம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச பயண அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டது.
மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருந்ததால் ஏழை, நடுத்தர மக்கள் அதில் பயணம் செய்ய தயங்கிய நிலையில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டதையொட்டி கூட்டம் அலை மோதியது.
முதலில் 3 நாட்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் ஆர்வத்தை பார்த்து மேலும் 2 நாட்களுக்கு சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டது. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மெட்ரோ ரெயிலில் சொகுசு பயணத்தை அனுபவிக்க திரண்டனர்.
சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை குடும்பமாக பயணம் செய்து நேரத்தை செலவிட்டனர். விடுமுறை நாட்கள் தவிர வேலை நாட்களில் கூட இலவச பயணம் நீட்டிக்கப்பட்டதால் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், கம்பெனிகளில் வேலை செய்பவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என பலரும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.
5 நாட்களில் 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்திருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரெயிலில் உள்ள வசதிகள், பாதுகாப்பு, இணைப்பு போக்குவரத்து வசதி, நேரம் மிச்சப்படுதல் போன்றவற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த இலவச பயணம் அறி விக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் மெட்ரோ ரெயிலில் கட்டணம் கொடுத்து வழக்கமாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை உயரும் என்ற எதிர்பார்ப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
5 நாட்கள் இலவச பயணத்திற்கு பிறகு இன்று மீண்டும் கட்டண பயணம் செயல்படுத்தப்பட்டது. இன்று எவ்வளவு பேர் பயணம் செய்கிறார்கள் என்பதை மெட்ரோ நிர்வாகம் கணக்கெடுக்கிறது. இலவச பயணம் மூலம் விழிப்புணர்வு பெற்று பயணிகள் மெட்ரோ ரெயிலை அதிகம் பயன்படுத்துகிறார்களா என்று ஆய்வு செய்கிறார்கள்.

ஆனால் கட்டணத்தை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் திட்டம் முழுமையாக பயன்பட்டிற்கு வரும் போது பயணிகள் எண்ணிக்கை உயரும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
பயணிகள் எண்ணிக்கை உயரும் போது தான் மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகையை சரி செய்ய முடியும். கட்டணத்தை குறைத்து வருவாயை பெருக்குவதே சிறந்த வணிக யுக்தியாகும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். #MetroTrain #ChennaiMetro