என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம் மீட்பு"

    • பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
    • ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30 கோடி மேல் இருக்கும்.

    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூரில் இருந்து மாமல்லபுரம் வரை 6 வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியில் இருந்து கேளம்பாக்கம் வரை ஒரு புறவழிச்சாலையும், காலவாக்கத்தில் இருந்து திருப்போரூர் வழியாக ஆலத்தூர் வரை மற்றொரு புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது.

    கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை கையகப்படுத்த சென்றனர். இதை எதிர்த்து தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை இல்லை என ஐகோர்ட்டு உத்தரவு அளித்தது.

    இதைதொடர்ந்து, திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி தலைமையில், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பந்தபட்ட தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்த 2.12 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கி மீட்டனர். ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30 கோடி மேல் இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

    பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

    • கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர் பகுதி மக்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் வருவாய்த்துறையினருக்கு ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் வசித்து வரும் மீனவர்களுக்கு மீன் உலர வைப்பதற்கும், பெரிய வலை இழுப்பதற்கும், படகுகளை நிறுத்தி வைப்பதற்கும், தமிழக அரசு கடலோரத்தில் 5.48 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இதனை ஒரு சில நபர்கள் தங்கும் விடுதிகள் அமைத்து அதற்கு பார்க்கிங் வசதி செய்தும் புல் செடி மரம் வளர்த்து அதனை சுற்றி 10 அடி உயரத்தில் கருங்கல்லால் சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை மீட்டு தரக்கோரி பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    அதனை தொடர்ந்து கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர் பகுதி மக்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் வருவாய்த்துறையினருக்கு ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் கானத்தூர் போலீசார் உதவியுடன் 3 பொக்லைன் எந்திரங்களை கொண்டு தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு கற்கள் கொண்டு மதில் சுவர் எழுப்பிய இடங்களை இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தனர் இதன் சந்தை மதிப்பு ரூ.67 கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 292 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

      செங்கல்பட்டு:

      செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலேரிபாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 6 வீடுகள் கட்டியும், விவசாயம் செய்தும் ஆக்கிரமித்து வந்ததை தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளியேற பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

      இந்த நிலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் 2 பொக்லைன் எந்திரம் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடித்து தள்ளி விவசாய நிலங்களை மீட்டனர்.

      60 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.90 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

      இந்த பகுதியில் காவல்துறை பயிற்சி பள்ளி கட்டிடம் கட்ட இருப்பதால் ஆக்கிரமிப்பில் இருந்த இடம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

      • மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
      • அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர்.

      காஞ்சிபுரம்:

      காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுரம் அருகே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடம் அமைந்துள்ளது.

      இந்த மடத்திற்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் கிராமம் பெரிய தோட்டம் பகுதியில் சுமார் 8.76 ஏக்கர் நிலம் உள்ளது. இதை பல ஆண்டு காலமாக தாமஸ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவரது மகன் பிரின்ஸ் என்பவர் கையகப்படுத்தி வைத்திருந்தார்.

      இந்நிலையில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும், கோர்ட்டிலும் மடத்தின் சார்பில் வழக்கு தொடுத்திருந்தனர். மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

      அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நிலத்தை மீட்டு மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர். கோர்ட்டு உத்தரவின்படி இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளால் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 6 கோடி ஆகும்.

      • அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது.
      • 2 வாரங்களுக்குள் மீதமுள்ள இடமும் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

      அம்பத்தூர்:

      வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புடைய 8 ஆயிரம் சதுர அடி இடத்தை மீட்கும் பணியில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

      சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகா தேவி உத்தரவின் பெயரில், உதவி ஆணையர் பாஸ்கரன், செயல் அலுவலர் குமரேசன் ஆகியோர் தலைமையில் முதற்கட்டமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை மஞ்சங்குப்பம் பகுதியில் 2 கோடியே 40 லட்சம் மதிப்பு உடைய 2 ஆயிரத்து 400 அடி சதுரஅடி நிலம் போலீசாரின் உதவியுடன் மீட்கப்பட்டது.

      இந்த இடமானது கடந்த 30 வருடங்களுக்கு முன்பு லட்சுமணன் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டது. சில வருடங்கள் மட்டுமே வாடகை செலுத்திய லட்சுமணனுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணத்தை கட்டவில்லை என்றும், இதுவரையில் வாடகைத் தொகை மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

      இதனையடுத்து அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

      அதன் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்புடைய 2 ஆயிரத்து 400 சதுரஅடி இடம் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 2 வாரங்களுக்குள் மீதமுள்ள இடமும் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

      • கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான 2 வீடுகளை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பை அகற்றினர்.
      • ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

      சோமங்கலம்:

      காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள நடுவீரப்பட்டு ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 1½ ஏக்கர் அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது.

      இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின் பேரில் குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோமங்கலம் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைத்திருந்த நிலத்தை பார்வையிட்டனர்.

      அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான 2 வீடுகளை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பை அகற்றினர்.

      அப்பகுதியில் அரசு சார்பில் அறிவிப்பு பெயர் பலகையை அதிகாரிகள் வைத்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

      • நிலத்தை பிரித்து ஆதி திராவிடர்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப் பட்டது.
      • நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்

      பல்லடம் :

      பல்லடம் அருகே உள்ள அலகுமலை ஊராட்சியில், அரசுக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பிரித்து ஆதி திராவிடர்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கு வசிக்காமல், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். அவர் அங்கு விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

      இதுகுறித்து திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. இதையடுத்து நேற்று அந்த இடத்திற்குச் சென்ற வருவாய்த் துறையினர் அங்கிருந்த மின் இணைப்பை துண்டித்து, இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

      மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில், ஆதிதிராவிடர்களுக்கு நிபந்தனையின் பேரில் வழங்கப்பட்ட நிலத்தை விதிமுறைகளைப் பின்பற்றாமல் வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த விற்பனை செல்லாது. எனவே அந்த நில பட்டாவை ரத்து செய்து அரசு நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

      • வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் 350 ஏக்கர் நிலம் இருந்தது.
      • முத்துலட்சுமி கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளையின் தக்காராக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

      காஞ்சிபுரம்:

      உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வடக்கு வாசல் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளை எனும் அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பை அதன் முன்னோர்கள் உருவாக்கி அதில் இருந்து வரும் வருவாயில் ஒரு பகுதியை கோவில் செலவுகளுக்கும், மீதத்தை கட்டளை செலவுகளுக்கும் வைத்து கொள்ள வேண்டும் எனவும், இந்த சொத்தானது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றும் எழுதி வைத்துள்ளனர்.

      இதன் அடிப்படையில் இந்த சொத்தானது அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

      இந்த அமைப்பின் கீழ் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது.

      குறிப்பாக வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் 350 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த அமைப்பின் வாரிசுரிமை பரம்பரை அறங்காவலராக சி.வி.சந்திரசேகரன் என்பவரும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.

      இந்த நிலையில் கொல்லா சிங்கண்ண செட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபம் கட்டியது மற்றும் பயணிகள் தங்கும் விடுதி கட்டியது என சட்ட விரோத செயல்களையும் செய்து வந்ததாகவும், சொத்துகளை அறநிலையத்துறைக்கு தெரியாமல் விற்க முயற்சித்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் அறநிலையத்துறைக்கு வந்தது. இதனை தொடர்ந்து சந்திரசேகரை அறநிலையத்துறை இணை ஆணையர் பதவி நீக்கம் செய்ததுடன் கட்டளையின் தக்காராக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமியை நியமித்தும் உத்தரவிட்டார்.

      அதன்பேரில் முத்துலட்சுமி கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளையின் தக்காராக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார். மேலும் அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் (பொறுப்பு) லட்சுமி காந்தன் பாரதி தலைமையில் செயல் அலுவலர்கள் வேலரசு, கார்த்திகேயன், ஆய்வாளர் பிரித்திகா, தனி தாசில்தார் வசந்தி, கிராம நிர்வாக அலுவலர் கோகுலகிருஷ்ணன், சிவகாஞ்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கட்டளை அலுவலகத்துக்கு சென்று அதை மீட்டு தக்காராக முத்துலட்சுமி நியமனம் பற்றிய தகவலை கதவில் ஒட்டினார்கள்.

      இதன் மூலம் கட்டளை இடத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் கட்டளை சொத்துகள் சம்பந்தமாக ஏதேனும் விவரங்கள் தேவைப்படுவோர் தக்காராக நியமிக்கப்பட்டுள்ள முத்துலட்சுமியை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

      • கடந்த 5.4.2023 ஆம் தினத்தன்று பொதுமக்கள் முன்னிலையில் இந்து சமய அறநிலை யத்துறையினரால் பொது ஏலம் விடப்பட்டது.
      • ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் ஏலம் எடுத்தவரிடம் இந்து சமய அறநிலையத் துறையினர் சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை ஒப்படைத்தனர்.

      தருமபுரி,

      தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பி.கோடுபட்டி பகுதியில் சென்றாயசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 70 வருடமாக ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.

      இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தை அறநிலைத்துறை யினர் ஏலம் விட நோட்டீஸ் அனுப்பியதை வாங்க மறுத்த ஆக்கிரமிப்பு காரர்களிடம் இருந்து சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நிலத்தின் மேல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர்.

      பின்னர் இந்து சமய அறநிலைத்துறைக்கு நிலம் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு செய்து வந்தவர்களுக்கு மூன்று முறை காலக்கெடு கொடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

      இதனைத் தொடர்ந்து கடந்த 5.4.2023 ஆம் தினத்தன்று பொதுமக்கள் முன்னிலையில் இந்து சமய அறநிலை யத்துறையினரால் பொது ஏலம் விடப்பட்டது.

      இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் 5 வருடத்திற்கு 15 லட்சத்து 20 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி முதல் ஏலம் எடுத்தவர்களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.

      இந்த நிலையில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தை விட்டு வெளியேறாமல் விவசாய நிலத்தில் கடலைக்காய், மஞ்சள் கால்நடைகளுக்கு தீவனபயிர் வாழைமரம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டுள்ளனர்.

      மேலும் நேற்று இந்து சமய அறநிலையத் துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மருத்து வத்துறையினர் வருவாய் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி எந்திரம் உழவு டிராக்டர் கொண்டு நிலத்தில் உள்ள பயிர்களை அழித்தனர்.

      ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் ஏலம் எடுத்தவரிடம் இந்து சமய அறநிலையத் துறையினர் சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை ஒப்படைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

      • ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
      • கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

      பூந்தமல்லி:

      பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.

      இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இடத்தை காலிசெய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர்.

      இதைத்தொடர்ந்து இன்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அதிகாரிகள் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள், வருவாய் துறையினர் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

      • சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
      • இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

      சங்ககிரி:

      சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

      அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் அறிவுடைநம்பி தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.

      • நிலத்தை மீட்பது குறித்து மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
      • கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

      மதுராந்தகம்:

      அச்சரப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சிஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டிடம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பள்ளி பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் இருந்தது. இந்த நிலம் மற்றும் கட்டிடத்தினை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர்.

      இந்த நிலத்தை மீட்பது குறித்து மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறையின் செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லஷ்மி காந்த பாரதிதாசன் தலைமையில் கோவில் நிலங்கள் வட்டாட்சியர் தங்கராஜ், செயல் அலுவலர் மேகவண்ணன், சரக ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த ஆட்சிஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

      பின்னர் கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் அறிவிப்பு பலகையும் அளவை கற்களும் வைக்கப்பட்டது.

      மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.4 1/2 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

      ×