என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli Court"

    • கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி என்ற பல்லு மாயாண்டி (வயது 28).

    இவரது தந்தை மணி பால் வியாபாரம் மற்றும் பந்தல் கட்டும் தொழில் செய்து வந்தார். மாயாண்டி தனது தந்தைக்கு உதவி செய்து வந்ததோடு, கூலி வேலைக்கும் சென்று வந்தார்.

    மாயாண்டி மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக மாயாண்டி இன்று காலை நெல்லை மாவட்ட நீதிமன்றத்துக்கு தனது தம்பி மாரிச்செல்வத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    இவர்கள் கே.டி.சி. நகர்-திருச்செந்தூர் ரோட்டில் கோர்ட்டு முன்பு வந்தனர். அப்போது காரில் ஒரு மர்மகும்பல் வந்தது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் மாயாண்டியை நோக்கி அரிவாளால் வெட்டுவதற்காக ஓடி வந்தார்.

    இதைப்பார்த்த மாயாண்டியும், மாரிச்செல்வமும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய மேலும் 3 பேர் சேர்ந்து மாயாண்டியை விரட்டினர்.

    அந்த கும்பல் கோர்ட்டு முன்பு மாயாண்டியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. மாயாண்டியின் கை மணிக்கட்டை துண்டாக்கிய கும்பல், கால் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டியதோடு தலையையும் சிதைத்தது.

    இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மாயாண்டி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    உடனே கொலையாளிகள் காரில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு வக்கீல், ஒரு போலீஸ்காரர் சேர்ந்து, கும்பலில் இருந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். மற்ற கொலையாளிகள் காரில் ஏறி தப்பிச்சென்றனர்.

    கோர்ட்டு முன்பு ஏராளமான வக்கீல்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் திரண்டிருந்த நிலையில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, கிழக்கு மண்டல துணை கமிஷனர் விஜயகுமார், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மாயாண்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட மாயாண்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராஜாமணி (33) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக பிடிபட்ட கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற வாலிபரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கொலை நடந்த சமயத்தில் கோர்ட்டு முன்பு ஏராளமான போலீசார் இருந்தும் குற்றவாளிகள் தப்பிச்சென்ற போது அவர்களை பிடிக்க முடியாமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.

    இதைத்தொடர்ந்து வக்கீல்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதற்கிடையே கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொலை கும்பல் கேரள பதிவெண் கொண்ட ஒரு காரில் வந்து கொலை செய்ததும், அந்த காரிலேயே தப்பிச்சென்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காரின் அடையாளத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

    இதன் பயனாக கொலையில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணன், சுரேஷ், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சிவா, தங்க மகேஷ், மனோ ராஜ் ஆகியோரும் கைதாகி உள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது.
    • தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது.

    நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிகையில் கூறப்பட்டுள்ளதாவது,

    திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப் படுகொலை நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், காவல்துறையின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே வந்தது எப்படி? அப்படியானால், காவல்துறையினர் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைவதை காவல்துறையினரே கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்களா? என்ற ஐயங்கள் எழுகின்றன. இவை அனைத்திற்கும் தமிழக காவல்துறையும், அரசும் விளக்கம் அளிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

    ஒவ்வொரு நிகழ்வின் போதும் முன்பகை காரணமாகவே இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாகக் கூறி காவல்துறையின் தோல்வியை நியாயப்படுத்தும் வகையில் தான் தமிழக அரசு பதிலளிக்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையின் அலட்சிய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

    நெல்லை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்தவரை கொலை செய்தவர்களை கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையினர் முன்னிலையில் படுகொலை நடைபெற்றிருக்கிறது. அதைத் தடுக்க தவறிய காவல்துறையினர், கொலை நடந்த பிறகு கொலையாளியைப் பிடிப்பது ஒன்றும் சாதனையல்ல. கொலையைத் தடுக்கத் தவறியது காவல்துறையின் படுதோல்வி. அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

    கடந்த சில நாட்களுக்கு முன் கடலூரில் கடை ஒன்றில் வணிகம் செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்குக் காரணமானவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டு, 15 நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், அந்த வழக்கிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது. அது எங்கு போயிருக்கிறது? என்பதுதான் தெரியவில்லை.

    ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது. சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத தமிழக ஆட்சியாளர்கள், தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் இருந்து வெளியே வந்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடவும் வகை செய்ய வேண்டும்.

    • நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும்.

    நெல்லை பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன்கள் மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23).

    கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மாயாண்டி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தனது சகோதரர் மாரி செல்வத்துடன் கடந்த 20 ஆம் தேதி நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது நீதிமன்றம் முன்பு வைத்து அவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு காரில் தப்பிச்சென்றது.

    அப்போது அதில் ஒருவரை போலீசாரும், வக்கீல்களும் சேர்ந்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(25) என்பதும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த கீழநத்தம் 2-வது வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டியை, ராஜாமணியன், மனோராஜ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 7 பேர் கும்பல் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த தங்கமகேஷ்(21), மனோராஜ்(27), சிவா(19), முத்துக்கிருஷ்ணன்(26), கண்ணன்(22), அனவரத நல்லூரை சேர்ந்த மற்றொரு கண்ணன்(20) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

    நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பை வழங்க வேண்டுமென தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அந்த உத்தரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

    • நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கண்ணன் என்பவரை 10 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.
    • இந்த கொலை வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதானார்கள். இந்த வழக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை:

    நெல்லை மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மனோ என்பவர் ஒரு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடைக்கப்பட்டார். அவரை சிறைக்குள் கைதிகள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி 72 நாள்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரது உடலைப் பெற்ற உறவினர்கள் கடந்த ஆண்டு ஜூலை 2-ந் தேதி அடக்கம் செய்தனர்.

    இவரது கொலைக்கு பழி வாங்கும் வகையில் அடுத்த சில நாட்களில் நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கண்ணன் என்பவரை 10 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.

    இந்த கொலை வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதானார்கள். இந்த வழக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொல்லப்பட்ட கண்ணனின் தந்தை நாராயணன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மகன் கண்ணன் கொலை வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர்களால் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள். சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

    எனவே கண்ணன் கொலை வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவும், அதுவரை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கிருஷ்ணா தாஸ் ஆஜராகி, கண்ணன் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் பலர் குற்றப் பின்னணியை கொண்டவர்கள். ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றவர்கள். எனவே இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில் நீதிபதி, மனுதாரர் மகன் கொலை வழக்கை சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    நெல்லையில் மணல் கடத்தலை தடுத்த ஏட்டு கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்டது வடக்கு விஜய நாராயணம். இங்குள்ள போலீஸ் நிலையத்தில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஜெகதீஷ்துரை (வயது 33).

    இவர் கடந்த ஆண்டு மே மாதம் 6-ந்தேதி இரவு ரோந்து பணியை முடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கக்கன்நகர் விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே ஒரு டிராக்டர் மணல் திருடி கொண்டு வேகமாக சென்றது. உடனே ஜெகதீஷ் துரை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணல் திருட்டு கும்பல் ஜெகதீஷ் துரை மீது டிராக்டரை கொண்டு மோதினார்கள். பின்னர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். இதையடுத்து விபத்து நடந்தது போன்று போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுபற்றி விஜய நாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், கிருஷ்ணன், முருகப்பெருமாள், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட முருகன், கிருஷ்ணன், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். #tamilnews
    அடுத்த மாதம் 12-ந்தேதி நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நெல்லை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #SVeShekher

    நெல்லை:

    பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது நெல்லை ஜெ.எம்-1 கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இன்று எஸ்.வி.சேகர் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து அடுத்த மாதம் ஜூலை 12-ந்தேதி எஸ்.வி.சேகர் நெல்லை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ராமதாஸ் உத்தரவிட்டார். அவ்வாறு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார். #SVeShekher #TirunelveliCourt

    ×