என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uniform Civil Code"

    • குழு அமைப்பது என மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.
    • உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

    நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகளை அளிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மதிப்பீடு செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதேபோல் ஒரு குழுவை அமைக்கும் திட்டத்திற்கு குஜராத் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த குழுவுக்கு அம்மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை வகிப்பார் என்றும், இதில் 3 முதல் 4 உறுப்பினர்கள் வரை இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் குஜராத் அரசின் இந்த அறிவிப்புக்கு அம்மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக அரசின் இந்த முடிவு சட்டசபை தேர்தலுக்கு முன்பான ஒரு ஏமாற்று வேலை என்று குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குறிப்பிட்டார். இதுபோன்ற சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில சட்டமன்றத்திற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • பொது சிவில் சட்டத்துக்கான சாத்தியக் கூறுகள் குறித்து 21வது சட்ட ஆணையம் ஆராய்ந்தது.
    • மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கிரிமினல் குற்றங்களுக்கு மட்டுமே ஒரே விதமான சட்டம் இருக்கிறது. சிவில் என்று சொல்லப்படக்கூடிய திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்று ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினர் கோரிக்கையாக வைத்து வருகின்றனர். பொது சிவில் சட்டத்துக்கான சாத்தியக் கூறுகள் குறித்து 21வது சட்ட ஆணையம் ஆராய்ந்தது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் பதில் அளித்துள்ளார்.

    பொது சிவில் சட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குமாறு 21வது சட்ட ஆணையத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. 21வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று முடிவடைந்துவிட்டது. சட்ட ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, பொது சிவில் சட்டம் தொடர்பான விஷயத்தை 22வது சட்ட ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்' என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சியினர் பொது சிவில் சட்டத்திற்கெதிராக வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பாராளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, இன்று மத்தியபிரதேச மாநிலத்தில் 5 வந்தே பாரத் ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்பு, நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். பின்னர் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை பல முறை சாடினார்.

    அப்போது பொது சிவில் சட்டம் (UCC) மற்றும் முத்தலாக் விவகாரத்தில், முஸ்லிம்களை தூண்டிவிட்டு தவறாக வழி நடத்துவதாக எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கினார்.

    "பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை தூண்டி விடுகின்றனர். ஒரு நாடு எவ்வாறு இரண்டு சட்டங்களால் இயங்க முடியும்? அரசியல் சாசனம், பொது சிவில் சட்டத்தை குறித்தும், சம உரிமை குறித்தும் பேசுகிறது. உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இவர்கள் (எதிர்க்கட்சிகள்) பொது சிவில் சட்டத்திற்கெதிராக வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார் மோடி.

    பிரதமர் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம், வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்ற கருத்து உருவாகி வருகிறது.

    22வது சட்ட கமிஷன், ஜூன் 14 அன்று, இந்த பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு மசோதா குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களையும், பரிந்துரைகளையும், 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுசிவில் சட்டம் அவசியம் என்று கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    • பொது சிவில் சட்டத்தை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொண்டு வருவோம் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாடு முழுவதும் வாக்கு சாவடிகளில் சிறப்பாக செயல்பட்ட பா.ஜனதா நிர்வாகிகளிடம் அவர் உரையாற்றினார்.

    அப்போது பிரதமர் மோடி, 'நாட்டின் சீரான வளர்ச்சிக்கு பொதுசிவில் சட்டம் அவசியம் என்று கருத்து தெரிவித்தார். வாக்கு வங்கி அரசியலுக்காக பொது சிவில் சட்டத்தை சிலர் எதிர்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

    கோவா, குஜராத், உள்ளிட்ட பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன் வந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று இரவு அவசரமாக ஆலோசனை நடத்தியது.

    பொதுசிவில் சட்டம் தொடர்பான சட்ட அம்சங்களை அவர்கள் விவாதித்தனர். 3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    வக்கீல்கள், நிபுணர்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு சட்ட ஆணையத்திடம் வரைவு முன்மொழிவை சமர்பிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தி தொடர்பாளர் இலியாஸ் இது தொடர்பாக கூறியதாவது:-

    அனைவருக்கும் அவர்களின் மதம் மற்றும் மரபு சட்டங்களை பின்பற்றுவதற்கான பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் அரசியல் அமைப்பு வழங்குகிறது.

    ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுசிவில் சட்டம் குறித்த பிரதமரின் கருத்துக்கள் அரசியலமைப்பின் உணர்வோடு பொருந்தவில்லை. அரசியலமைப்புக்கு இது எதிரானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜாமியத் உலமா அமைப்பின் பிரதிநிதியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

    பொதுசிவில் சட்டம் அவசியம் என்று கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே பொது சிவில் சட்டத்தை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொண்டு வருவோம் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    • ம.தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
    • எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

    திருச்சி:

    தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யுமாறு இந்திய குடியரசு தலைவரை கேட்டுக்கொள்ளும் வகையில், ம.தி.மு.க. சார்பில், திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதனை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அண்ணா சிலையிலிருந்து சிங்காரத்தோப்பு, பூம்புகார் விற்பனை நிலையம் வரை அவர் நடந்து சென்று பொதுமக்களிடையே கையெழுத்து வாங்கினார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

    நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் கலவரம் இதற்கெல்லாம் பதில் கூறாமல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பா.ஜ.க.வினர் பொது சிவில் சட்டம் குறித்து இப்போது பேசுகிறார்கள்.

    நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் எங்கள் கட்சி தலைமையும், கூட்டணி கட்சி தலைமையும் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    • பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன.

    நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா் ஆகியோா் சிறுபான்மையினராகவும் உள்ளனா்.

    திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் இந்துக்கள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உள்ளன. அவ்வாறு சட்டங்கள் தனித்தனியாக இருப்பது நிா்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதாக மத்திய அரசு கூறி வருகிறது.

    மக்களிடையே ஒற்றுமை உணா்வை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான சட்டங்களை வகுக்க அரசுகள் முயற்சிக்க வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு வலியுறுத்துகிறது.

    அதன் அடிப்படையில், நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது.

    கோவா, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன. அதை பாஜக நிராகரித்து வருகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பொது சிவில் சட்ட விவகாரத்தை பா.ஜ.க. முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில், பொது சிவில் சட்டம் அவசியமானது என பிரதமா் மோடி கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது.
    • இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி இந்த சட்டத்திற்கு ஆதரவாக உள்ளது.

    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதக் கூறியதாவது:-

    கொள்கை அளவில் நாங்கள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின் 44வது பிரிவு நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது. ஆனால் இது அனைத்து மதங்களுடனும் தொடர்புடையது என்பதால், இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்து மதத்தினரிடம் இருந்தும், அரசியல் கட்சியினரிடம் இருந்தும் ஆலோசனைகளை பெறவேண்டும். ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைவரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கு ஒரு சட்டம் இருந்தால் வீட்டை ஒழுங்காக நடத்த முடியாது, அதுபோல்தான் இரண்டு சட்டங்களில் நாடு இயங்க முடியாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    • மணிப்பூர் கலவரத்தை பா.ஜ.க. கட்டவிழ்த்து விட்டுள்ளது.
    • எல்லை மாநிலங்கள் முழுவதும் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பா.ஜ.க. விரும்புகிறது.

    சென்னை :

    மணிப்பூர் கலவரத்திற்கு பா.ஜ.க.வே பொறுப்பு என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் அனைத்துக்கட்சி கண்டன கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் தலைமை தாங்கினார்.

    கண்டன கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் ஆகியோர் மணிப்பூர் கலவரத்திற்கு பா.ஜ.க.வே காரணம் என கண்டன உரையாற்றினர்.

    கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

    மணிப்பூரில் மே மாதம் முதல் கலவரம் நடைபெறுகிறது. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 3 நாட்கள் கலவரம் நடந்து 2 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டவரை எப்படி காவல்துறை கையை கட்டிக்கொண்டு நின்றதோ, அதே போன்று மணிப்பூரில் இப்போது நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி நேற்றே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். பொது சிவில் சட்டம் வேண்டும் என்று பிரசாரம் தொடங்கி உள்ளார். வட இந்தியாவில், அதை சொல்லி, இந்துக்கள்- முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். பல்வேறு மொழி, மதங்களை கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்பது சாத்தியம் இல்லை. ஒரு மதத்திலேயே ஒற்றுமை இல்லாதபோது எப்படி பொது சிவில் சட்டத்தை கொண்டு வரமுடியும்.

    நம் நாட்டிற்கு பொது சிவில் சட்டம் இப்போது தேவையில்லை. வளர்ச்சி அடைந்த பிறகு கொண்டு வரலாம். அப்போதும், அது தேவையா என்பதை நாம் பார்க்க வேண்டும். இவற்றை மக்களிடையே நாம் அழுத்தமாக சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும். பொது சிவில் சட்டம் வேண்டும் என்பவர்கள் ஒருபக்கமும், பொது சிவில் சட்டம் வேண்டாம் என்பவர்கள் ஒரு பக்கம் பிரிவார்கள். இதை வைத்து அரசியல் செய்ய பா.ஜ.க. பார்க்கிறது.

    எனவே, தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் ஆர்.எஸ்.எஸ்.சையும் பா.ஜ.க.வைவும் அப்புறப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. எல்லை மாநிலங்கள் முழுவதும் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பா.ஜ.க. விரும்புகிறது. இதற்காகவே மணிப்பூர் கலவரத்தை பா.ஜ.க. கட்டவிழ்த்து விட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்டத் தலைவர் சிவ ராஜசேகரன், எஸ்.சி. துறை மாநில துணை தலைவர்கள் வின்சென்ட், நிலவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.உமாபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பிரதமர் நாட்டை ஒரு குடும்பத்துக்கு சமமாகக் குறிப்பிட்டுள்ளார்.
    • பொது சிவில் சட்டம் என்பது ஒரு அபிலாசை.

    புதுடெல்லி :

    காஷ்மீருக்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 370-ஐ நீக்குவது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஆகிய மூன்றும் பா.ஜ.க.வின் தேர்தல் இலக்கு திட்டங்களாக இருந்து வந்தது.

    இவற்றில் முதல் இலக்கை நிறைவேற்றி விட்டது. இரண்டாவது இலக்கை நிறைவேற்றி வருகிறது. மூன்றாவது இலக்கான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதில்தான் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

    அடுத்த சில மாதங்களில் நாடு மக்களவை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த விவகாரத்தை மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு இப்போது கையில் எடுத்துள்ளது.

    அந்த வகையில், சமீபத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக 22-வது மத்திய சட்டக்கமிஷன், பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மத அமைப்புகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில் 21-வது மத்திய சட்டக்கமிஷன், இந்த தருணத்தில் பொது சிவில் சட்டம் என்பது தேவையற்றது, விரும்பத்தக்கது அல்ல என்று கருத்து தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நேற்று முன்தினம் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது அவர், "2 வகையான சட்டங்களால் நாட்டை வழிநடத்த முடியாது, பொது சிவில் சட்டம் அவசியம்" என ஆணித்தரமாக குறிப்பிட்டது, பெரும் அதிர்வுகளை அரசியல் அரங்கில் உருவாக்கி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் நேற்று கருத்து தெரிவித்து டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி கருத்து வெளியிட்ட மரியாதைக்குரிய பிரதமர் நாட்டை ஒரு குடும்பத்துக்கு சமமாகக் குறிப்பிட்டுள்ளார். சுருக்கமாக அர்த்தப்படுத்தினால், அவரது ஒப்பீடு உண்மையாக இருக்கலாம். ஆனால் உண்மை மிகவும் மாறுப்பட்டது.

    குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு, அரசியல், சட்ட ஆவணமான அரசியல் சாசனத்தால் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது.

    ஒரு குடும்பத்தில்கூட பன்முகத்தன்மை இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம், இந்திய மக்களிடையே பன்முகத்தன்மையை அங்கீகரித்துள்ளது.

    பொது சிவில் சட்டம் என்பது ஒரு அபிலாசை. அதை ஒரு செயல் திட்டத்தால் நாட்டை வழிநடத்தும் பெரும்பான்மை அரசால், மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது.

    பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஒரு எளிதான நடவடிக்கை என்பது போல பிரதமர் அதை தோன்றச்செய்துள்ளார். அவர் கடந்த சட்டக்கமிஷன் அறிக்கையில், "இந்த தருணத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது சாத்தியம் அல்ல" என்று கூறி இருப்பதை வாசிக்க வேண்டும்.

    நாடு தற்போது பா.ஜ.க.வின் வார்த்தைகளாலும், செயல்களாலும் பிளவுபட்டுள்ளது. பொதுமக்களிடம் பொது சிவில் சட்டத்தை திணித்தால் அது பிளவுகளை விரிவுபடுத்தி விடும்.

    பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பிரதமர் ஓங்கிக் குரல் கொடுத்திருப்பதன் நோக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வெறுப்புணர்வு குற்றங்கள், பாகுபாடு, மாநிலங்களின் உரிமைகளை மறுத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான். மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    நல்லாட்சி தருவதில் தோல்வி கண்டுவிட்டு, பா.ஜ.க. இப்போது வாக்காளர்களை பிளவுபடுத்தி, அடுத்த தேர்தல்களில் வெற்றிபெற பொது சிவில் சட்டத்தை களம் இறக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பொது சிவில் சட்டம் என்பது ஒரே மதம், ஒரே மொழி இருக்கும் தேசத்திற்கு மட்டுமே பொருந்தும்.
    • ஆம் ஆத்மி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தற்போது நடைபெற்று முடிந்த கூட்டத்தில் பங்கேற்றனர் அவ்வளவுதான்.

    கும்பகோணம்:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ரெயில் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. மறைமுகமாக பேசிக்கொண்டிருந்த பொது சிவில் சட்டத்தை பிரதமர் மோடி வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். இந்தியாவை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பொது சிவில் சட்டம் சரியாக வராது. பிரச்சனைகளை தான் உருவாக்கும். பொது சிவில் சட்டம் என்பது ஒரே மதம், ஒரே மொழி இருக்கும் தேசத்திற்கு மட்டுமே பொருந்தும்.

    இந்த தேசத்தில் ஒரே சிவில் சட்டம் கொண்டு வரப் போகிறேன் என்று மோடி கூறுகிறார். அவருடைய தேர்தல் பிரச்சாரம் அது தான். இதை கூறினால் நாட்டில் மக்கள் பல்வேறு விதமாக பிரிந்து செல்வார்கள், சண்டையிட்டுக் கொள்வார்கள். அதுதான் அவர்களுக்கு தேவை.

    மணிப்பூரில் மலைவாழ் மக்களுக்கும், நகரத்தில் வாழும் மக்களுக்கும் பிரச்சனையை தோற்றுவித்து, கடந்த ஆறு மாத காலமாக அந்த மாநிலம் தீப்பற்றி எரிகிறது. தற்போது வலிமையான ராணுவம் உள்ள நிலையில் மோடி நினைத்திருந்தால் 24 மணி நேரத்தில் கலவரத்தை அடக்கி இருக்க முடியும். ஆனால் அந்த கலவரத்தை உருவாக்கியவர்களே அவர்கள் தான்.

    ஆம் ஆத்மி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தற்போது நடைபெற்று முடிந்த கூட்டத்தில் பங்கேற்றனர் அவ்வளவுதான். கூட்டணி என்பது பல்வேறு கருத்துக்களை உடையவர்கள் சேர்வது தான். அவர்கள் இன்னும் கூட்டணியில் உறுதியாக வரவில்லை .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது சிவில் சட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆதரவை தெரிவித்து உள்ளது.
    • சிவசேனா கட்சியும் பொது சிவில் சட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிரமாக தயாராகி வருகிறது.

    இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த 14-ந்தேதி முதல் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் அவசியம் என்று கூறினார். நாட்டில் இரு விதமான சட்டங்களால் நிர்வாகம் செய்ய இயலாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்பதால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

    இதற்கு நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று முன்தினம் இரவே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி தனது எதிர்ப்பை வெளியிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து உள்ளன.

    இதற்கிடையே பொது சிவில் சட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆதரவை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. சந்தீப் பதக் கூறுகையில், ' கொள்கை அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி ஆதரிக்கிறது. என்றாலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.

    சிவசேனா கட்சியும் பொது சிவில் சட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம், தி.மு.க ஆகிய கட்சிகள் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளன. பெரும்பாலான கட்சிகள் இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருகின்றன.

    பொது சிவில் சட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறி இருப்பதாவது:-

    நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறி இருப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கமாக உள்ளது.

    நாட்டில் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர விரும்பினால் முதலில் அதை இந்து சமுதாயத்திடம் இருந்து தொடங்க வேண்டும். இந்து சமுதாயத்தில் இன்னமும் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன.

    இந்துக்கள் பல ஊர்களில் கோவில்களில் நுழையும் உரிமை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாமி கும்பிடும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. அவர்கள் பூஜை செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை.

    அனைத்து இந்துக்களும் சாதி மாறுபாடுகளை கடந்து, அனைத்து கோவில்களிலும் பூஜைகள் செய்ய, வழிபாடுகள் நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். முதலில் இந்துக்களிடம் இந்த ஒற்றுமை உருவாகட்டும்.

    இவ்வாறு தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

    பொது சிவில் சட்டம் குறித்து இதுவரை அ.தி.மு.க. தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை. பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க அ.தி.மு.க. தலைவர்களும் தயங்குகிறார்கள். என்றாலும், இந்த விஷயத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கருத்தில் கொண்டு அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இது தொடர்பாக கேட்டபோது, 'பொது சிவில் சட்டம் குறித்து கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய முடிவு எடுப்பார். இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம். எனவே அவர் முடிவை எடுத்து அறிவிப்பார்' என்றார்.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் கடுமையாக எதிர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பொது சிவில் சட்டத்துக்கு அ.தி.மு.க.வும் தனது எதிர்ப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்துவிட்டு பிரதமர் பேச வேண்டும்.
    • வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

    சென்னை:

    தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்லத் திருமணம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்கள் செ.அஸ்வினி-க.பிரவீன் குமார் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அமைச்சர் காந்தி ஒரு வேண்டுகோள் வைத்தார். அவருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சொல்ல வேண்டி உள்ளது.

    இன்றைக்கு நல்லதைகூட ஜாக்கிரதையாக ஒருமுறைக்கு பலமுறை யோசித்து தான் செய்ய வேண்டி உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த போது கூட உடனுக்குடன் எதையும் செய்து விட முடியும். ஆனால் இப்போது அப்படி அல்ல. நாம் ஆட்சியில் இருப்பதால் ஒவ்வொன்றையும் யோசித்து செய்ய வேண்டி உள்ளது.

    இதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே கட்சிக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தி.மு.க. முப்பெரும் விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கி கவுரவித்தோம்.

    தலைவர் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுத்தும் தூய தொண்டனாக விளங்குபவர் கும்மிடிப்பூண்டி வேணு.

    ஆனால் பிரதமராக இருக்க கூடிய மோடி 2 நாட்களுக்கு முன்பு தி.மு.க. பற்றி ஒரு உரையாற்றி இருக்கிறார்.

    தி.மு.க. குடும்ப அரசியலை நடத்துகிறது. தி.மு.க. வெற்றி பெற்றால் அவர்களது குடும்பம்தான் வளர்ச்சி அடையும் என்று பேசி இருக்கிறார். ஆமாம் தி.மு.க. ஒரு குடும்பம் தான்.

    இவ்வாறு சொன்னதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால் அவர் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க. குடும்பம் குடும்பமாக அரசியல் நடத்தி வளர்ச்சி அடைந்து வருவதாக பேசி உள்ளார்.

    நாட்டின் பிரதமராக இருக்கும் மோடிக்கு வரலாறு தெரியவில்லை. பேரறிஞர் அண்ணா கட்சி தொடங்கிய போது தம்பி தம்பி என்று தொண்டர்களை அழைப்பார். கலைஞர் பேசும் போது அனைவரையும் உடன்பிறப்பே என்று அழைத்தார்.

    அது அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் அக்காவாக இருந்தாலும் தங்கையாக இருந்தாலும் அத்தனை பேரையும் உடன்பிறப்பே என்றுதான் அழைப்பார். ஆக இது உள்ளபடியே குடும்ப அரசியல்தான்.

    தி.மு.க. பல்வேறு மாநாடுகளை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி இருக்கிறோம். அப்படி 3, 4 நாள் மாநாடு நடத்தும் போது குடும்பம், குடும்பமாக வாருங்கள் என்றுதான் கலைஞர் அழைப்பார்.

    அதேபோல்தான் தி.மு.க.வினர் குடும்பம் குடும்பமாக கைக்குழந்தையுடன் வருவார்கள். பந்தலில் கைக்குழந்தைகளை தொட்டிலில் ஆட்டுவார்கள். மாநாடு மட்டுமல்ல போராட்டங்களுக்கும் கூட குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்று சிறை செல்வார்கள். இது தி.மு.க.வில் உள்ள வழக்கம்.

    ஆனால் பிரதமர் மோடி பேசும் போது தி.மு.க.வுக்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் வளர்ச்சி அடையும் என்கிறார். ஆம் கருணாநிதி குடும்பம் என்றால் இந்த தமிழ்நாடுதான்-தமிழர்கள்தான்.

    50 ஆண்டு காலமாக திராவிட ஆட்சிதான் தமிழகத்தில் இருந்திருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்துவிட்டு பிரதமர் பேச வேண்டும்.

    இன்று திராவிட மாடல் ஆட்சியாக கலைஞர் வழியில் நின்று ஆட்சி நடத்தி வருகிறோம். இதற்கு முன்பு ஒரு வருடம் மிசாவில் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் அவர்களை குடும்பத்தினர் சென்று பார்ப்பது வழக்கம்.

    ஆனால் சென்னை சிறையில் அப்போது 2 மாதம் அனுமதியே தரவில்லை. உடனே தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டார். அனுமதி தராவிட்டால் சிறைவாசலில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார்.

    அதற்கு பிறகுதான் அனுமதி தந்தனர். அப்போது சிறையில் இருந்த எனக்கு தான் முதல் அனுமதி கிடைத்தது. ஆனால் அவர் என்னை உடனே வந்து பார்க்கவில்லை.

    காரணம் என்னை மட்டும் அவர் மகனாக கருதவில்லை. சிறையில் உள்ள அனைவரையும் மகனாக கருதி அனைவரையும் பார்த்து விட்டு என்னை சந்திப்பதாக கூறினார்.

    எனவே தி.மு.க. குடும்பம் என்று பிரதமர் மோடி பொருத்தமாகத்தான் கூறி உள்ளார். இப்போது அவருக்கு ஒரு அச்சம் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த 23-ந்தேதி பாட்னாவில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி ஒரு தேர்தல் வியூகம் அமைக்க முதற்கட்டமாக முயற்சி எடுத்து அந்த கூட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டார்.

    அதன் பிறகு ஏற்பட்ட அச்சம்தான் பிரதமர் இறங்கி வந்து இப்போது பேசுவதற்கு காரணம்.

    மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறது. அங்கு கடந்த 50 நாட்களாக நடந்து வரும் வன்முறையால் தீப்பற்றி எரிகிறது. 150 பேர் வரை பலியாகி இருப்பார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    ஆனால் இவ்வளவு கலவரம் நடந்தும் இதுவரை பிரதமர் அந்த பக்கமே போகவில்லை. நீண்ட நாளுக்கு பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை உள்துறை மந்திரி அமித்ஷா நடத்தி உள்ளார்.

    இப்போது பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் கூறி வருகிறார். நாட்டில் 2 விதமான சட்டம் இருக்க கூடாது என்று பிரதமர் கூறுகிறார்.

    நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து மத குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். ஆனால் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

    நான், தமிழக மக்களை கேட்க விரும்புவது நீங்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி கொண்டிருக்கும் அரசு எப்படி தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி உருவாக காரணமாக இருந்தீர்களோ அதேபோல் மத்தியில் ஒரு ஆட்சி உருவாக நீங்கள் தயாராக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் காந்தி, கும்மிடிப்பூண்டி கி.வேணு, மாவட்டச் செயலாளர் கோவிந்த் ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

    ×