என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vietnam"

    • யாகி புயல் பாதிப்பால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

    ஹனோய்:

    வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை வியட்நாமை தாக்கியது.

    வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டியது.

    புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

    கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. புயல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மீட்புப் பணிகளில் ராணுவம், போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

    யாகி புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 176 பேர் காயம் அடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. புயல் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் அதிகமானோரை காணவில்லை. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    வியட்நாம் நாட்டில் பல தசாப்தங்களாக இல்லாத வகையில் யாகி புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிலிப்பைன்சில் யாகி புயல் உருவானது.
    • இந்தப் புயல் வியட்நாமை கடுமையாக தாக்கியது.

    புதுடெல்லி:

    பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இதேபோல், யாகி புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகினர். புயலால் பாதிப்பு அடைந்த அரசுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா இரங்கல் தெரிவித்தது.

    இதற்கிடையே, புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர், வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இந்தியா நிவாரண பொருள்களை அனுப்பி வைத்தது.

    இந்நிலையில், யாகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இரண்டாவது கட்டமாக 32 டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

    இதில் ஜெனரேட்டர், தற்காலிக டென்ட், சூரிய விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அடங்கும் என தெரிவித்துள்ளது.

    • விலங்குகள் "H5N1" வகை A வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
    • எச்5என்1 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாலூட்டிகளிடையே பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.

    தெற்கு வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் நாற்பத்தேழு புலிகள், மூன்று சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை குயுஹ்ன் சஃபாரி பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள வியோன் சோய் மிருகக்காட்சிசாலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ வியட்நாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, விலங்கு சுகாதார நோயறிதலுக்கான தேசிய மையத்தின் சோதனை முடிவுகளின்படி, விலங்குகள் "H5N1" வகை A வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.

    இருப்பினும், விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எந்த மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கும் சுவாச அறிகுறிகள் எதுவும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக சுகாதார அமைப்பு 2022 முதல், எச்5என்1 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாலூட்டிகளிடையே பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.

    எச்5என்1 நோய்த்தொற்றுகள் மனிதர்களுக்கு லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம், மேலும் சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    • உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.
    • நாட்டின் தலைநகரான ஹனோய் -க்கு தாய் குடிபெயர்ந்துள்ளார்

    சினிமாக்களில் வருவதுபோல் வியட்நாமில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமை சேர்ந்த தந்தை ஒருவருக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் மகள் இருந்துள்ளார். தனது மகள் வளர வளர அவள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் போலும் இல்லாமல் மிகவும் அழகாக இருந்ததால் அவள் உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.

    எனவே மகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார். இதில் அவள் தனது மகள் இல்லை என்று அவருக்கு தெரியவந்தது. இதற்குப் பிறகு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை தனது மனைவியிடம் குழந்தைப்பேறு இல்லாதவள் என்று கூறி தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

    ஆனால் தான் குழந்தை பெற்றதாக சிறுமியின் தாய் உறுதியாக இருந்துள்ளார். சண்டை முற்றிய நிலையில் தனது கணவனை பிரிந்து மகளை அழைத்துக்கொண்டுநாட்டின் தலைநகரான ஹனோய் -க்கு தாய் குடிபெயர்ந்துள்ளார். அங்கு மகளை புதிய பள்ளியில் சேர்த்தார்.

    இந்நிலையில் பள்ளியில் மகளின் பிறந்தநாள் விழாவில் அதே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் அவளது தோழியான லான் என்ற சிறுமியை தாய் பார்த்துள்ளார். லான் பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருப்பதை இந்த தாய் உணர்ந்துள்ளார். எனவே மேற்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் அனைத்திற்கும் விடை கிடைத்துள்ளது.

     

    டிஎன்ஏ பரிசோதனையில் லான் - தான் இவரின் மகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு சிறுமிகளுக்கும் ஒரே மருத்துவமனையில் பிரசவம் ஆகியுள்ளது . மருத்துவமனையில் வைத்து இரண்டு பெண் குழந்தைகளும் இடம் மாறி இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

    • வியட்நாம் மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 17 ஆயிரம் ரூபாய் ஆகும்.
    • 70 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் வகையில் கடுமையாக விதி அமல்.

    வியட்நாமில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. சாலையில் சிகப்பு விளக்கு எரியும்போது வாகனங்கள் நிற்காமல் சென்றாலோ, செல்போன் பேசிக்கொண்டு சென்றாலோ கடுமையான அபராதம் விதிக்கப்படும் என விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இரு சக்கர வாகனங்கள் சிகப்பு விளக்கு விழுந்தபின், கோட்டை தாண்டி சென்றால் இந்திய பண மதிப்பிற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதற்கு முந்தைய அபராதத்தை விட இது 6 மடங்கு அதிகமாகும். காரில் செல்லும்போது இதேபோன்று விதியை மீறினால் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் அபராதம் இரண்டு மடங்காகும்.

    இதில் என்ன விஷேசம் என்றால் விதிமுறையை மீறும் வாகனங்கள் தொடர்பாக தகவல் கொடுத்தால், தகவல் கொடுக்கும் நபர்களுக்கு 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அத்துடன் அவர்கள் விவரம் ரசகியமாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் இந்த ரூல்ஸ் இந்தியாவில் இருந்தால் ஐ.டி. வேலையை உதறவிடுவோம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் தயாரிப்பை சீனாவிலிருந்து வியட்நாமிற்கு மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களின் உற்பத்தியை சீனாவிற்கு வெளியே மாற்றுவது இதுவே முதல் முறை. ஆப்பிள் தனது ஐபாட் உற்பத்தியை வியட்நாமிற்கு மாற்றுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஷாங்காய் மற்றும் நாட்டின் பிற நகரங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தான் என கூறப்படுகிறது.

    சப்ளை தடைகளைத் தவிர்ப்பதற்காக அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்ட உதிரிபாகங்களினை கூடுதலாக  உருவாக்குமாறு ஆப்பிள் அதன் சப்ளையர்களைக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஷாங்காய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் வழக்கமான வணிகம் பாதிக்கின்றனவாம். அதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

     ஆப்பிள் ஐபேட்

    சில காலமாக, ஆப்பிள் நிறுவனம் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கப் பார்க்கிறது. அடுத்த சாத்தியமான சந்தைக்கு வியட்நாம் மிகவும் பொருத்தமான தேர்வாக உள்ளதால் அதன் உற்பத்தியை அங்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    வியட்நாம் சீனாவை விட ஆப்பிளின் சிறந்த தேர்வாக இருப்பதற்கு முதன்மைக் காரணம், ஐபேட் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான உழைப்பு மற்றும் பிற வளங்களைப் பெறுவது எளிது என்பது தான்.

    • ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது.
    • கோவை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் பயனடைவார்கள்.

    கோவை

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு மட்டுமே தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது.

    இந்நிலையில், கோவையில் இருந்து வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகருக்கு தனியார் நிறுவனம் விமான சேவை தொடங்கியுள்ளது.

    சிங்கப்பூருக்கு தினமும் இரவு 8.55 மணிக்கு புறப்படும் விமானம் சிங்கப்பூர் சென்றவுடன், அங்கிருந்து வியட்நாமுக்கு புறப்பட்டு செல்லும்.மறுதினம் வியட்நாமில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்தடைந்து, அங்கிருந்து. கோவைக்கு இரவு 7.55 மணிக்கு வந்தடையும்.

    இதனால் கோவை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் பயனடைவார்கள்.

    இதேபோல் கோவையில் இருந்து துபாய்,கோலாலம்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும். இதன்மூலம் சுற்றுலா செல்வோரும், தொழில்துறையினரும் பயன்பெறுவார்கள் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் செய்முறை வகுப்புகள் நடைபெற்றன.
    • வியட்நாமின் ராணுவம் முதன்முதலாக இந்திய ராணுவத்துடன் பயிற்சி மேற்கொண்டது.

    சந்திமந்திர்:

    இந்தியா-வியட்நாம் இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள சந்திமந்திர் ராணுவ தளத்தில் தொடங்கியது.

    வியட்நாமின் ராணுவம், இந்திய ராணுவத்துடன் மேற்கொண்ட முதல் பயிற்சி இதுவாகும். ஐநா அமைதி பாதுகாப்பு குழு நடவடிக்கைகளில் ராணுவ பொறியாளர் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி நடைபெற்றது.

    வின்பேக்ஸ் என அழைக்கப்படும் இந்த பயிற்சியின் போது, பேரிடர் காலங்களில் மனிதர்களை மீட்க உதவும் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவின் கீழ் உருவாக்கப்பட கருவிகள் காட்சிப் படுத்தப்பட்டன.

    இரு நாட்டு வீரர்களுக்கும் செய்முறை வகுப்புகள் நடைபெற்றன. இன்று நடந்த பயிற்சியின் நிறைவு விழாவில், இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் பாம் சான்ஹ் சாவோ, மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் நாவ் குமார் காந்துரி உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த வின்பேக்ஸ் பயிற்சி வியட்நாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 

    • இந்தியா, வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது.
    • இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    இந்தியா, வியட்நாம் இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளை எட்டியுள்ளது.

    இந்நிலையில், வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரி புய் தங் சன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை தலைநகர் டெல்லியில் நேற்று சந்தித்தார்.

    இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    மேலும், இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

    • இந்தியா-வியட்நாம் இடையே ராணுவ ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இந்த படகுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • கொரோனா கால சவால்களுக்கு மத்தியிலும் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஹாய் ஃபாங்:

    மத்திய அரசு , வியட்நாம் நாட்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை வழங்கும் திட்டத்தின் கீழ் அதிவிரைவு பாதுகாப்பு படகுகளை வழங்குகிறது. இதற்காக முதல் ஐந்து படகுகள் இந்தியாவின் லார்சன் & டியூப்ரோ கப்பல் கட்டும் தளத்திலும், இதர 7 படகுகள் வியட்நாமின் ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திலும் உருவாக்கப்பட்டன.

    வியட்நாம் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஹாய் ஃபாங்கில் உள்ள ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது இந்தியா சார்பில் வியட்நாமிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை அவர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேசிய மந்திரி ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான இந்தியாவில் தயாரித்தல், உலகிற்காக தயாரித்தல் என்ற திட்டத்தின் கீழ் இந்த படகுகள் தயாரிப்பு திட்டம் சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டார்.

    கொரோனா கால சவால்களுக்கு மத்தியிலும் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருப்பது, இந்திய பாதுகாப்பு உற்பத்தித் துறையின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் உறுதிப்பாட்டிற்கு சான்றாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    எதிர்காலத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே ஒத்துழைப்புடன் கூடிய ராணுவத் திட்டங்களுக்கான முன்னோடியாக இத்திட்டம் செயல்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் இந்திய பாதுகாப்புத் துறை தனது திறன்களை கணிசமாக உயர்த்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

    உள்நாட்டுத் தேவைகளோடு, சர்வதேச தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு ஓர் உள்நாட்டு தொழில்துறையை அமைப்பதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

    வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் இன்று சந்தித்துப் பேசினர். #KimJongUn #DonaldTrump #VietnamSummit
    ஹனோய்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிரம்ப் - கிம் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



    இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் இன்று இரவு சந்தித்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இரவு விருந்தில் பங்கேற்றனர்.

    டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #KimJongUn #DonaldTrump #VietnamSummit
    வியட்நாம் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #TrumpKimSummit
    ஹனோய்:

    வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வந்தது. அதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது.
     
    இதைத்தணிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.

    இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நாளை (27-ம் தேதி) மற்றும் நாளை மறுதினமும் (28-ம் தேதி) சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, பியாங் யாங்கில் இருந்து தனி ரெயில் மூலம் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வியட்நாம் தலைநகர் ஹனோய் வந்தடைந்தார். வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கிம் வருகையையொட்டி டாங் டாங் நகரில் இருந்து ஹனோய் வரை 170 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப்படை விமானத்தின் மூலம் புறப்பட்டு இன்று இரவு ஹனோய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், கிம்முடன் ஆன 2-வது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்ப்பதாக பதிவிட்டுள்ளார்.

    டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #TrumpKimSummit
    ×