search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikravandi By Election"

    • தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    • வேட்பு மனுதாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள், 24-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுவை வாபஸ் பெற 26-ந் தேதி கடைசி நாளாகும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் பிடாகத்தை அடுத்த அத்தியூர்திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் நா.புகழேந்தி (வயது 71).

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    இதையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 6 மாதத்திற்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.

    அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து தீவிர பணியில் இறங்கி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதன் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

    தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    இந்த சூழலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வேட்பு மனுதாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள், 24-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுவை வாபஸ் பெற 26-ந் தேதி கடைசி நாளாகும்.

    வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் என மொத்தம் 5 பேர் மட்டுமே தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் மற்ற அனைவரும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.

    இதனால் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளே யாரும் செல்லாத அளவிற்கு எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ளதோடு அங்கு போலீசார், பேரிகார்டு மூலம் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    • வேட்பாளர் தேர்வு தொடர்பாக அன்புமணி, புகழேந்தி உள்பட மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.
    • யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை ராமதாசிடம் நிர்வாக குழுவினர் வழங்கி உள்ளனர்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    கட்சியில் யாரை வேட்பாளராக அறிவிப்பது, கூட்டணி கட்சியான பா.ஜ.க. ஆதரவை பெறுவது போன்ற விவகாரங்களை கட்சியின் நிர்வாக குழுவினருடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசித்தார்.

    தைலாபுரம் தோட்டத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் தீரன், வடிவேல் ராவணன், பு.த.அருள்மொழி, தர்மபுரி எம்.எல்.ஏ.வெங்கடேஷ், திருக்கச்சூர் ஆறுமுகம், ஜெய பாஸ்கர், வக்கீல் பானு, டாக்டர் செந்தில் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.

    வேட்பாளர் தேர்வு தொடர்பாக அன்புமணி, புகழேந்தி உள்பட மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இவர்களில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை டாக்டர் ராமதாசிடம் நிர்வாக குழுவினர் வழங்கி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது.
    • இன்று அல்லது நாளை வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்து அறிவிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 10-ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியான தி.மு.க. முதல் ஆளாக களம் இறங்கி உள்ளது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    தி.மு.க.வுக்கு போட்டியாக அ.தி.மு.க., பா.ம.க. சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். நாம் தமிழர் கட்சியும் போட்டியிட தயாராகி வருகிறது. தி.மு.க. சார்பில் முன்கூட்டியே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகத்துடன் ஆலோசித்து வருகிறார்.

    இருவரும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி விவாதித்துள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு 7 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ் செல்வன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் இவரே போட்டியிட்டிருந்தார். இதனால் இவருக்கே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காணை ஒன்றிய செயலாளர் ராஜா, விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர்கள் பன்னீர், முகுந்தன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் லட்சுமி நாராயணன், தொழில் அதிபர் டி.கே.சுப்பராயன், விக்கிரவாண்டி நகர செயலாளர் பூரண ராவ் ஆகியோரும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டுள்ளனர்.

    இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இருப்பினும் இன்று அல்லது நாளை வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்து அறிவிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளரின் பெயர் விவரம் இன்று மாலையிலோ நாளை காலையிலோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.

    • பாராளுமன்ற தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவை எதிா்கொண்ட தமிழ்நாட்டில் தோ்தலுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் நடத்தை விதிகள் தற்போதும் அமலில் உள்ளது.
    • இடைத்தோ்தல் நடத்த தங்களுடைய நிா்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளனா்.

    புதுடெல்லி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த 6-ந்தேதி காலமானாா். இதையடுத்து அத்தொகுதி காலியானதாக ஏப்ரல் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

    தோ்தல் விதிகளின்படி, ஒரு சட்டப்பேரவை அல்லது பாராளுமன்ற தொகுதி அதன் உறுப்பினரின் உயிரிழப்பாலோ, ராஜினாமா அல்லது வேறு காரணங்களுக்காகவோ காலியானதாக அறிவிக்கப்பட்டால், அத்தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்படவேண்டும்.

    இந்த நிலையில் தற்போது பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தோ்தலில் 6 கட்டங்களுக்கான தோ்தல் அறிவிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 6 கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.

    அடுத்து 7-ம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வரும் மே 7-ந்தேதி வெளியிட உள்ளது. அப்போது விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்த்து 7-ம் கட்ட தோ்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    7-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்படுவதாக இருந்தால் அதற்கான அறிவிக்கையை வருகிற 7-ந்தேதியன்று தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

    பாராளுமன்ற தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவை எதிா்கொண்ட தமிழ்நாட்டில் தோ்தலுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் நடத்தை விதிகள் தற்போதும் அமலில் உள்ளது.

    இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கும் சோ்த்து இடைத்தோ்தலை நடத்தினால் தனியாக அத்தொகுதிக்கு ஆகும் முன்னேற்பாடுகள், செலவினம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்கலாம் என்று ஆணையம் கருதுகிறது.

    இந்த விவகாரத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி, மாநில தோ்தல் அதிகாரி ஆகியோா் இடைத்தோ்தல் நடத்த தங்களுடைய நிா்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளனா்.

    இதையடுத்து ஜூன் 1-ந்தேதி இடைத்தோ்தல் நடத்துவதற்கான சாத்தியத்தை தலைமைத் தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போது இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 6-ந்தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8-ந்தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    தற்போது இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இந்த நிலையில் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த இடைப்பட்ட காலத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி விடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    எனவே எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது தொடர்பான அறிவிப்பை இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×