சினிமா செய்திகள்

நவம்பர் 1-ந்தேதி முதல் படப்பிடிப்பு ரத்து: தயாரிப்பாளர் சங்கம் மறுபரிசீலனை செய்ய தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல்

Published On 2024-09-07 06:59 GMT   |   Update On 2024-09-07 06:59 GMT
  • நடிகர்கள்- தயாரிப்பாளர்கள் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது.
  • தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையிலான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்.

சென்னை:

தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் தலைமையில் நிர்வாகிகள் ஹேமச்சந்திரன், பிரேம், தாசரதி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமையிலான சங்க நிர்வாக குழுவினர் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

இதுபற்றி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 18.8.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் நிர்வாகிகள் இடையே நடந்த கலந்து ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர்கள்- தயாரிப்பாளர்கள் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது.

அதன் மீது தீவிர கலந்தாலோசனைக்கு பின்னர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக இரு தரப்பிற்கும் சாதகமான புதிய புரிந்துணர்வு ஒப்பந்ததிற்கான 37 பரிந்துரைகளும், நடிகர் தனுஷ் சம்பந்தப்பட்ட சுமூகமான பரஸ்பர தீர்வு அடங்கிய ஆவணங்களும், இன்றைய சந்திப்பில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான முரளி ராமசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக விரைவில் தயாரிப்பாளர்கள்-நடிகர்கள் இடையே ஒரு தீர்மானம் எட்டப்பட்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையிலான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி, அதில் கணிசமான முன்னேற்றமும் உள்ளதால், புதிய படங்களுக்கு தற்போது பூஜையிட்டு தொடங்கக் கூடாது என்றும், நவம்பர் 1-ந்தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்றும் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்து திரைத்துறை தொழிலாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பணிகள் சுமூகமாக நடைபெற, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழிவகுக்கும் எனவும் நம்புகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News