கிரிக்கெட்

சிஎஸ்கே தோல்வி: முதல் 6 ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்து விட்டோம்- டோனி

Published On 2023-04-28 09:32 GMT   |   Update On 2023-04-28 09:32 GMT
  • ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்னே எடுத்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 43 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்.

பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 52 ரன்னும், ருதுராஜ் 47 ரன்னும் எடுத்த னர். ராஜஸ்தான் தரப்பில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

இந்த இலக்கு சராசரியை விட அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை விட்டு கொடுத்து விட்டோம்.

ஆனால் அந்த நேரத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறந்ததாக இருந்தது. இதனால் அவர்களுக்கு நிறைய ரன்கள் கிடைத்தது. எங்களது பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் எட்ஜ் ஆகி பவுண்டரிகளாக சென்றன.

இது ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. சராசரிக்கு அதிகமான இலக்கு என்பதால் நாங்கள் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை.

பதிரானா பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினார் என்பதை இலக்கு பிரதிபலிக்கவில்லை. ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்தார். இறுதி கட்டத்தில் ஜுரலும் நன்றாக விளையாடினார்.

ஜெய்ப்பூர் மைதானம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம். எனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை விசாகப்பட்டினத்தில் அடித்ததன் மூலம் எனக்கு 10 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஜெய்ப்பூரில் 183 ரன்கள் விளாசினேன். அது எனக்கு மேலும் ஒரு ஆண்டு விளையாட வாய்ப்புக்கு வழிவகை செய்தது.

இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் (மஞ்சள் படை) என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது தோல்வியை (8 ஆட்டம்) சந்தித்தது. ராஜஸ்தான் 5வது வெற்றியை பெற்றது. இந்த தோல்வி மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை அணி 3வது இடத்துக்கு சரிந்தது.

Tags:    

Similar News