வழிபாடு

பழனியில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்

Published On 2025-02-10 11:58 IST   |   Update On 2025-02-10 11:58:00 IST
  • பக்தர்கள் வசதிக்காக 3 நாட்களுக்கு இலவச பஸ்கள் இயக்கம்.
  • முடி காணிக்கை செலுத்த சிறப்பு வசதி

பழனி:

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளனர்.

பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் இருப்பதால் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை ஒவ்வொரு குழுவாக நிறுத்தி கோவில் நிர்வாகத்தினர் சாமி தரிசனம் செய்ய அனுப்புகின்றனர்.

பக்தர்கள் வசதிக்காக பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் சண்முக நதியில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு அரசு நகர பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக இலவசமாக இயக்கப்படும் அரசு பஸ்களுக்கான கட்டணத்தை பழனி திருக்கோவில் நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது.

இலவச அரசு பேருந்துகள் இயக்கத்தை பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, சச்சிதானந்தம் எம்.பி., ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று முதல் 3 நாட்களுக்கு இலவசமாக பஸ்கள் இயக்கப்படுவது போலவே இன்று முதல் மூன்று நாட்களுக்கு பழனி மலைக்கோவிலில் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திருக்கோவில் நிர்வாகிகள் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி எதிர்புறம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்தே சென்று வரும். இதே போல பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட இடங்களில் 5 தற்காலிக வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்காக 7 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். சாதாரண நாட்களில் காலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

தைப்பூச திருவிழா நாட்களில் கூட்டம் அதிகரித்து வருவதால் இன்று முதல் வருகிற 12-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் முடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு கியூ.ஆர்.கோடுடன் இலவச டிக்கெட் வழங்கப்படும். அதனை காண்பித்து இலவசமாக முடி காணிக்கை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாதுகாப்புக்காக 3 நாட்களுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News