திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவம் நாளை தொடங்குகிறது
- இன்று மாலை அங்குரார்ப்பணம் என்னும் முளையிடுதல் விழா நடக்கிறது.
- தேர்த்திருவிழா வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
சென்னை :
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நரசிம்ம பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் நாளை (7-ந்தேதி) தொடங்குகிறது.
இதையொட்டி இன்று மாலை அங்குரார்ப்பணம் என்னும் முளையிடுதல் விழா நடக்கிறது. நாளை காலை 7.30 மணிமுதல் 8.30 மணிக்குள் கொடி ஏற்றப்படுகிறது.
2-ம் நாள் விழாவான வருகிற 8-ந்தேதி இரவு சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளிய சிங்கர் அருள்பாலிக்கிறார். 9-ந்தேதி கருட சேவையும், கோபுர வாசல் தரிசனமும் நடக்கிறது. 11-ந்தேதி இரவு அனுமந்த வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
முக்கிய விழாவான தேர்த்திருவிழா வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அன்று இரவு தோட்டத்திரு மஞ்சனம் நடக்கிறது. வருகிற 15-ந்தேதி உற்சவம் நடக்கிறது. 17-ந்தேதி முதல் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவுபெறும்.