செய்திகள்
சேலத்தில் இன்று முதல்-அமைச்சர் எப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட காட்சி.

முதலமைச்சர் பழனிசாமி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

Published On 2018-07-28 12:35 IST   |   Update On 2018-07-28 12:35:00 IST
சேலம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #TNCM #EdappadiPalanisamy
சேலம்:

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் வந்தார்.

பின்னர் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் நங்கவள்ளியில் புதிய தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தை திறந்து வைத்தார். வனவாசியில் புதிய தொழில் நுட்ப கல்லூரி கொங்கணாபுரத்தில் புதிய போலீஸ் நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.

இன்று (28-ந்தேதி) காலை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சுற்றுலா மாளிகையில் சேலம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்தும் விவரமாக கேட்டறிந்தார்.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கழக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்குகிறார். இதையொட்டி அந்த பகுதியில் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் முதல்வரை வரவேற்று ஏராளமான பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆடிப்பண்டிகையையொட்டி சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடக்கிறது. நாளை மாலை நடைபெறும் அதன் தொடக்க விழாவில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி அதனை தொடங்கி வைக்கிறார்.

சேலம் மாநகரில் ரூ.4.16 கோடி செலவில் 9 இடங்களில் பசுமை வெளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் அம்மாபேட்டை அய்யாசாமி பூங்காவில் நடைபெறும் விழாவில் பங்கேற்று அனைத்து பூங்காக்களையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையொட்டி சேலம் மாநகர் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #TNCM #EdappadiPalanisamy
Tags:    

Similar News