உள்ளூர் செய்திகள் (District)

கூவத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது- 2 பேர் பலி

Published On 2023-04-08 07:58 GMT   |   Update On 2023-04-08 07:58 GMT
  • கூவத்தூர் அருகே உள்ள காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் கார் சென்று கொண்டிருந்தது.
  • விபத்தில் காரில் இருந்த புருஷோத்தமன், முருகானந்தம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மாமல்லபுரம்:

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 30). திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். முருகானந்தம், புருஷோத்தமனை பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தார்.

இந்த நிலையில் புருஷோத்தமன், முருகானந்தம் மற்றும் அவர்களது நண்பர்கள் நரேஷ், கிஷோர், நிர்மல், கார்த்திக் ஆகியோர் புதுக்கோட்டையில் உள்ள நண்பரை சந்திக்க சென்னையில் இருந்து நேற்று இரவு காரில் புறப்பட்டு சென்றனர்.

கூவத்தூர் அருகே உள்ள காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த மேம்பால தடுப்புச் சுவரில் மோதியது. இதில் கார் கவிழ்ந்து விழுந்து உருண்டோடி நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த புருஷோத்தமன், முருகானந்தம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் நரேஷ், கிஷோர், நிர்மல், கார்த்திக் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் முலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News