உள்ளூர் செய்திகள் (District)

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் செர்ரி மலர்கள்

Published On 2024-09-22 04:10 GMT   |   Update On 2024-09-22 04:10 GMT
  • ரோஸ் நிறத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் காட்சி அளிக்கின்றது.
  • ரோஸ் நிறமாக மலைப்பகுதி காணப்படுகிறது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலை பலவிதமான இயற்கை நிலைகள் அழகுபடுத்தி மெருகூட்டி பார்க்கின்றன. இதில் முக்கிய பங்களிப்பை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் முதன்மை இடத்தினை பிடிக்கின்றன, பொதுவாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகமான அளவில் இந்த மரங்கள் காணப்படுகிறது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த மரத்தில் உள்ள இலைகள் உதிர தொடங்கி செப்டம்பர் மாத இறுதி மற்றும் அக்டோபர் மாதத்தில் ரோஸ் நிறத்தில் பூக்கும் கானக செர்ரி மலர்கள் தற்போது கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூத்து குலுங்குகின்றது.

இதன் சிறப்பு அம்சம் 2 மாதங்களில் பசுமை நிறத்தில் காணப்படும். இந்த மரத்திலுள்ள இலைகள் முழுவதும் உதிர்ந்து செர்ரிப் பூக்கள் மட்டுமே ரோஸ் நிறத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் காட்சி அளிக்கின்றது.

மேலும் சுற்றுலாத்தலங்கள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பூத்துக் குலுங்கும் இந்த மரங்களில் உள்ள மலர்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

பசுமை போர்த்திய மலைப்பகுதிகளில் ரோஸ் நிற மலர்கள் சூடிய மலைகளின் இளவரசியாக கூடுதல் அழகாக கொடைக்கானல் காட்சியளிக்கின்றது.

இந்த செர்ரி மரங்களில் உள்ள மலர்கள் அக்டோபர் மாத இறுதியில் உதிர தொடங்கி இலைகள் துளிர்த்து பழைய நிலைக்கு திரும்பி விடும். கொடைக்கானலில் நிலவும் குளுமையான வானிலையை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் இந்த பூக்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் கழுகு பார்வை காட்சிகளால் பார்க்கும் போது ரோஸ் நிறமாக மலைப்பகுதி காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News