உள்ளூர் செய்திகள்
மழை சேதத்திற்கு காப்பீட்டு தொகை வழங்காததால் 5 ஏக்கர் நெற்பயிருக்கு தீ வைத்த விவசாயிகள்
- மழையாலும், பனியாலும் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது.
- ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலுத்தி காப்பீடு செய்திருந்தார்.
வேலூர் :
வேலூர் மாவட்டம் கெங்காரெட்டி பள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் 5 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். அதற்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலுத்தி காப்பீடு செய்திருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது பெய்த மழையாலும், பனியாலும் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க ஒரு மாதமாக அலைந்துள்ளார். ஆனால் வேளாண்மைத் துறையும், காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு வழங்காமல் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேளாண்மைத்துறையின் கவனத்தை ஈர்க்க 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் சேதமடைந்த நெற் பயிர்களை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.