2-வது நாளாக கொட்டும் மழையிலும் கலைந்து செல்லாமல் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
- மீனவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு பந்தலில் தொடர்ந்து மீனவர்கள் உள்ளனர்.
ராமேசுவரம்:
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் மற்றும் நீதி மன்ற காவலிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கை வசம் உள்ளது.
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலை முதல் இரவு வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள் அதே உண்ணாவிரத பந்தலில் நேற்று இரவில் இருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரி அல்லது மத்திய அரசு அதிகாரிகள் மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு பெற்று தருவதாக உறுதியளிக்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் இரவு, பகலாக தொடரும் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தமூர்த்தி, தாசில்தார் ஜாபர் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட கலெக்டரை சந்திக்க வருமாறு அழைத்தனர். ஆனால் மீனவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தங்கச்சிமடத்தில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு பந்தலில் தொடர்ந்து மீனவர்கள் உள்ளனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தை அடுத்து தங்கச்சிமடம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாளை இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., மனித நேய மக்கள் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தர இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.