புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- கோவில்களில் ஏழை, எளியவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது.
- புத்தாடை, மிக்ஸி, பீரோ உள்பட பல்வேறு சீர்வரிசை பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். இதற்கான செலவை கோவில்களே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஏழை, எளியவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தஞ்சை இணை ஆணையர் மண்டலத்தின் சார்பில் 19 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இதில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 9 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்க ளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் புத்தாடை, மிக்ஸி, பீரோ, கட்டில், 4 கிராம் திருமாங்கல்யம் உள்பட பல்வேறு சீர்வரிசை பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட அறங்கா வலர் குழு உறுப்பினர் அரசாபகரன், தஞ்சை மண்டல இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் அரண்மனை தேவஸ்தானம் கவிதா, தஞ்சை உதவி ஆணையர் நாகையா, கவுன்சிலர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவிலில் 2 ஏழை ஜோடிகளுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவி லில் 5 ஜோடிகளுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 3 ஜோடிகள் என தஞ்சாவூர் இணை ஆணையர் மண்டல எல்லைக்கு உட்பட்ட கோவில்களில் 19 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.