உள்ளூர் செய்திகள்

மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைந்த பண்ணையம் கருத்தரங்கு

Published On 2025-02-09 22:03 IST   |   Update On 2025-02-09 22:03:00 IST
  • 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.
  • 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது.

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" எனும் மாபெரும் கருத்தரங்கம் இன்று திண்டுக்கல் PSNA கல்லூரியில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கினை மண் காப்போம் இயக்கத்துடன் PSNA கல்லூரி மற்றும் HDFC வங்கி இணைந்து நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா கூறியதாவது:-

ஈஷா மண் காப்போம் இயக்கம் தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடும் விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் மண்வளத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்காக என்ற நோக்கத்தோடு, வெற்றி பெற்ற விவசாயிகளின் அனுபவ பகிர்வு விவசாயிகளையே சென்றடையும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் புதிதாக களம் காணும் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.

இதுவரை தமிழகம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக இயற்கை விவசாய களப்பயிற்சி வழங்கியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த வழிகாட்டுதல்களை வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவும் நேரடியாக அவர்களின் நிலங்களுக்கு சென்றும் வழங்கி வருகிறது. இதன் மூலம் 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில், விவசாயிகள் ஒரே ஒரு பயிரை மட்டுமே நம்பி விவசாயம் செய்வதால், போதுமான விளைச்சலும், விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கு தீர்வாக ஈஷா மண் காப்போம் இயக்கம் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" என்ற மாபெரும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நல்ல வருமானம் பெற முடியும் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்தும் விதமாக ஆடு, மாடு, கோழி, வாத்து, மீன் ஆகியவைகளை உள்ளடக்கிய 'மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை' ஒன்றை நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு இருந்தது.

இதனுடன் விதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது.

Tags:    

Similar News