கோவையில் பஞ்சாலை முன்பு தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
- 3 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்க வேண்டும்.
- மத்திய அமைச்சர்கள் கோவைக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம்.
கோவை,
தமிழகத்தில் உள்ள 7 பஞ்சாலைகளின் ஆலை வாயில் முன்பு என்.டி.சி பஞ்சாலைத்தொழிலாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பங்கஜா மில் ரோட்டில் என்.டி.சி பஞ்சாலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்க வேண்டும். பரிதவிக்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் வழங்கவேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.
சம்பளம் கொடுத்து பென்ஷன் குறைபாட்டை சரி செய்ய வேண்டும். 3 ஆண்டு போனஸ், இதர பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை நடத்தினர்.
இதேபோல் கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள முருகன் மில்ஸ் வாயில் முன்பாக பஞ்சாலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 1800 நிரந்தர மற்றும் 1200 ஒப்பந்த தொழிலாளர்கள் என 3,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மில்லில் வேலை செய்யும் குடும்பத்தினர்கள் தங்களுடைய வருவாய் இழந்து கஷ்டமான சூழலில் உள்ளனர்.
மத்திய அரசைக் கண்டித்து, தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் கோவைக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
இந்த போராட்டத்தில் ஹெச்.எம்.எஸ், ஏ.டி.பி, சி.ஐ.டி.யு.ஐ, என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு, சி.எம்.எல். எஃப், டாக்டர் அம்பேத்கர் என்.டி.எல்.எப் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.