கோவில்பட்டியில் செருப்பு கடையில் தீ விபத்து
- கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள், ஷூக்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் சாலையில் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த ஆபிரகாம் என்பவரின் குடும்பத்தினர் செருப்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தரைத்தளம் மற்றும் மாடியில் 2 தளங்கள் என கடை செயல்பட்டு வருகிறது.
தரைத்தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றும் அவரின் மகன் ஜோயல் இருவரும் பார்த்து வருகின்றனர். மாடியில் உள்ள முதல் தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றொரு மகன் பிரபு பார்த்து வருகிறார். மேலும் மாடியில் உள்ள 2-வது தளத்தை குடோனாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு மாடியில் உள்ள முதல் தளத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று 2 தீயணைப்பு வண்டிகள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள், ஷூக்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.
தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.