உள்ளூர் செய்திகள்

பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடக்கம்

Published On 2024-07-02 05:30 GMT   |   Update On 2024-07-02 05:30 GMT
  • 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
  • படகுகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் வடக்கு துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில், நான்கு படகுகளுடன் 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஊர்க்காவல்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 15-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் ஒரு மீனவர் 18 வயதிற்கு குறைவாக இருந்ததால் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மீதமுள்ள 24 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் நான்கு படகுகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கியும், சாலை மறியல் செய்தும் போராட்டங்களை மேற் கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு உமா தேவி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனைதொடர்ந்து, அனைத்து நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் எஸ்.பி.ராயப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாம்பன் மீனவர்கள் 25 பேருடன் 4 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற் கொள்ளுவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் வருகிற 5-ந்தேதி பாம்பன் பேருந்து பாலத்தை முற்றுகையிட்டு பேரணியாக மண்டபம் ரெயில் நிலையத்திற்கு சென்று சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வடக்கு துறை முகத்தில் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு மீனவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்திய மீனவர்கள் என கருதி மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News