வனத்துறையினர் இடத்தில் கட்டப்பட்ட 60 ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு- பொதுமக்கள் மறியல்
- விசாரித்த நீதிபதி வனத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது மேல்பாக்கம் கிராமம். இங்கு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள், கோவில்கள் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் சுமார் ஐந்து தலைமுறையாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைத்து குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை, மின் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டு வீட்டு வரியும் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி வனத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் முதல் கட்டமாக 40 வீடுகளை அகற்ற கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணக்குமாரி தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார், மின்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் ஜே.சி.பி.எந்திரத்துடன் வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, தற்போது வசித்து வரும் நிலத்தினை குடியிருப்பவர்களுக்கே சொந்தமாக்கிட வேண்டும் அல்லது தங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.