உள்ளூர் செய்திகள் (District)

ராயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் பலி- உறவினர்கள் போராட்டம்

Published On 2023-03-31 07:22 GMT   |   Update On 2023-03-31 07:40 GMT
  • தகவலறிந்து உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
  • திடீரென ரோஜா அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவு வார்டின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

திருவொற்றியூர்:

திருவள்ளூர் மாவட்டம், கொங்கல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் வருண். இவரது மனைவி ரோஜா(வயது22). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே 2 ½ வயதில் ஆண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் ரோஜா 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவரை கடந்த 22-ந்தேதி பிரசவத்திற்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் ரோஜாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

திடீரென அவருக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது. இதில் உடல் நிலை மோசம் அடைந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே நேற்று அவர் திடீரென இறந்தார். இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் டாக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரசவத்தின் போது அறுவை சிகிச்சையில் ரோஜாவின் வயிற்றில் இருந்த சிறிய கட்டி வெட்டப்பட்டதால் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டினர்.

மேலும் அவர்கள் திடீரென ரோஜா அனுமதிக்கப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவு வார்டின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் ராயபுரம் போலீசார் விரைந்து வந்து ரோஜாவின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

Tags: