- நல்லது கெட்டது இரண்டையும் ஏற்றுக் கொள்ளும்போது சந்தோஷமே.
- சிலநாட்கள் சென்றதும் ஓடிப்போன குதிரை திரும்ப வந்தது.
ஒரு மங்கோலியனிடம் ஒரு குதிரை இருந்தது. அது ஒருநாள் மலைக்காட்டுப் பக்கம் ஓடிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட பக்கத்து வீட்டுக்காரன் அனுதாபப்பட்டு சொன்னான்.
"இது உனக்கு போதாத காலம் போலிருக்கிறது" என்று.
அதைக் கேட்டு கலங்காத மங்கோலியன் சொன்னான், "விடு! எல்லாம் நன்மைக்கே"
சிலநாட்கள் சென்றதும் ஓடிப்போன குதிரை திரும்ப வந்தது. அது தனியாக வராமல் கூடவே காட்டிலிருந்து ஐந்து குதிரைகளையும் அழைத்து வந்திருந்தது. அன்று முதல் மங்கோலியன் ஆறு குதிரைகளுக்குச் சொந்தக்காரன் ஆனான்.
இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் வந்து சொன்னான், உனக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்துவிட்டது என்று. இதைக் கேட்டு மங்கோலியன் சந்தோஷமாய் சொன்னான். "எல்லாம் நன்மைக்கே".
மறுநாள் காட்டுக் குதிரை ஒன்றின்மேல் மங்கோலியனின் மகன் சவாரி செய்ய ஏறினான். குதிரை அவனை கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்தவன் கால் உடைந்து படுத்த படுக்கையானான், அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து அனுதாபத்துடன் கூறினான். உனக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது என்று.
அதைக் கேட்டு கலங்காமல் மங்கோலியன் சொன்னான் 'எல்லாம் நன்மைக்கே' என்று புன்னகைத்தான்.
இதைக் கேட்டதும் அண்டை வீட்டுக்காரனுக்கு எரிச்சலானது. "எதற்கெடுத்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிறாயே, கால் உடைந்து உன் மகன் கிடப்பது உனக்கு நன்மையா? இது ஒரு கெடுதல் என்று உனக்குத் தெரியவில்லை?" என்று கத்தினான். அதற்கும் அமைதியாக மங்கோலியன் 'எல்லாம் நன்மைக்கே' என்றான்.
சில நாட்கள் கடந்த நிலையில் அந்த நாட்டு அரசன், தனது படைக்கு ஆள் திரட்டுவதற்காக அந்த கிராமத்துக்கு வந்தான். இளைஞர்களையும், பையன்களையும் பட்டாளத்தில் சேர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக பிடித்துப் போனார்கள்.
அந்த கிராமத்தில் எல்லா வாலிபர்களும் இழுத்துச் செல்லப்பட மங்கோலியன் மகன் மட்டும் வீட்டில் இருந்தான். அதாவது கால் உடைந்து கிடந்ததால் அரசன் அவனை படைக்கு லாயக்கற்றவன் என்று விட்டு விட்டான். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து கேட்டான், இதுதான் எல்லாம் நன்மைக்கா!"
எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் கலக்கம் குழப்பம் வராது. நல்லது கெட்டது இரண்டையும் ஏற்றுக் கொள்ளும்போது சந்தோஷமே.
-சபீதா ஜோசப்