ஹோலி அன்று முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்கவும்: சர்ச்சையாகிய பீகார் பாஜக எம்.எல்.ஏ. பேச்சு
- ஹோலி பண்டிகையின்போது கலர் பொடி மீது பட்டால் குற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
- அவர்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.
ஹோலி பண்டிகை வருகிற வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொண்டு மாலை 6 மணிக்குப் பிறகு நோன்பு திறப்பார்கள். ரம்ஜான் மாதம் வெள்ளிக்கிழமை அவர்கள் சிறப்பு தொழுகை மேற்கொள்வார்கள்.
ரம்ஜான் மாதம் வெள்ளிக்கிழமை அன்று ஹோலி பண்டிகை வருவதால், இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில், முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என பீகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஹரிபூஷன் தாகூர் பசாயுல் (Haribhushan Thakur Bachaul) இது தொடர்பாக கூறியதாவது:-
வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமை வருகிறது. அதில் ஒன்று ஹோலி பண்டிகையோடு வருகிறது. ஆகவே, இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும். ஹோலி பண்டிகையின்போது கலர் பொடி அவர்கள் மீது பட்டால் குற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு இது அவசியம் என முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அவர்கள் எப்போதும் இரண்டு நிலைப்பாடு கொண்டுள்ளனர். கலர் பொடி விற்பனை செய்வதற்கான கடைகள் அமைத்து அதன் மூலம் வருவமானம் பெறுவதால் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவர்களின் ஆடைகளில் சில கறைகள் படிந்தால், அவர்கள் நரகம் (dozakh) என பயப்படத் தொடங்குவார்கள்.
இவ்வாறு ஹரிபூஷன் தாகூர் பசாயுல் தெரிவித்தார்.
ஹரிபூஷன் தாகூர் பசாயுல் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடுமையாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்படடு வருகின்றன.
ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான இஸ்ரெய்ல் மன்சூரி கூறுகையில் "பண்டிகைகள் வரும்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுடைய இஃப்தார் நிகழ்ச்சிகளில் இந்துக்கள் கலந்து கொள்கிறார்கள். ஹோலி பண்டிகையில் முஸ்லிம் பற்றி பாஜக எம்.எல்.ஏ. கவலைப்படுவது ஏன். இந்த மக்கள் அரசியல் பிரச்சனைக்காக வகுப்புவாத பிரச்சனையை தூண்டிவிட்டு, சனாதனத்தின் கொடி ஏந்தியவர்கள் போல் நடிக்கிறார்கள்" என்றார்.
எனினும் மாநில மைானரிட்டி விவகாரத்துறை மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான ஜமா கான் கூறுகையில் "எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்படாது. பண்டிகைக் காலத்தில் நல்லிணக்கத்தை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.