மத்திய உளவுத்துறை பெண் அதிகாரி ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு.. கேரளாவில் மர்மம்!
- ரெயில் தண்டவாளத்தில் 24 வயது உளவுத்துறை (ஐபி) அதிகாரி மேகா இறந்து கிடந்தார்.
- இதற்கிடையே பிரேத பரிசோதனைக்குப் பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேரளாவில் மத்திய உளவுத்துறை துறை (IB) இளம் பெண் அதிகாரி ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று (திங்கள்கிழமை) காலை, திருவனந்தபுரத்தில் உள்ள பெட்டா ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் 24 வயது உளவுத்துறை (ஐபி) அதிகாரி மேகா இறந்து கிடந்தார்.
பெட்டா காவல்துறையினரின் கூற்றுப்படி, மேகா, பத்தனம்திட்டாவில் உள்ள கூடல் பகுதியை சேர்ந்தவர். பெட்டா அருகே பேயிங் கெஸ்ட்டாக வசித்து வந்தார். அவரது மரணம் தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
ஒரு பெண் ரெயில் தண்டவாளத்தில் குதிப்பதைக் கண்டதாக ரெயில் லோகோ பைலட் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேகாவின் பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனைக்குப் பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெட்டா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.