100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் உயர்த்த கோரி கேரள காங்கிரஸ் போராட்டம்: ராகுல், பிரியங்கா பங்கேற்பு
- 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தக் கோரி போராட்டம் நடந்தது.
- இதில் கேரள காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறியும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க அவர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரியும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், சசி தரூர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பிற கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பிரியங்கா காந்தி, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மில்லியன் கணக்கான குடும்பங்களை வாழ்வாதாரமின்றி விட்டுச் சென்றுள்ளது. வறுமை மற்றும் துன்பத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியில் உடனடியாக கவனம் செலுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊதியம் இல்லாததால் வாழ்க்கையை நடத்த போராடும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக விடுவித்தல், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க ஊதியத்தை அதிகரித்தல், வேலை நாட்களை 150 நாளாக அதிகரித்தல் ஆகியவற்றை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியது.