டெல்லி சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கம்.. அமைச்சர்கள் பதவியேற்பு!
- இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லி பொறுப்பேற்றார்.
- முன்னாள் முதல்வர் அதிஷி எதிர்க்கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைநகர் டெல்லிக்கு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களை பாஜக கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 22 இடங்களுடன் ஆம் ஆத்மி பின்தங்கியது.
பாஜக சார்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி சாலிமார் பாக் தொகுதி எம்எல்ஏ ரேகா குப்தா டெல்லி முதல்வராகப் பதவியேற்றார். எதிர்கட்சித் தலைவராக ஆம் ஆத்மி சார்பில் கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் அதிஷி எதிர்க்கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின் டெல்லியில் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 24) தொடங்கியது.
இதில் பாஜக கேபினட் அமைச்சர்களாக பர்வேஷ் சிங், கபில் சர்மா, பங்கஜ் குமார், ஆசிஷ் சூட், மஞ்சிந்தர் சிங், ரவீந்தர் சிங் ஆகியோர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.