பொய் வாக்குறுதிகள் அளிப்பவர்களுக்கு டெல்லி பாடம் கற்பித்துள்ளது: அமித் ஷா
- டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
- ஷீஷ் மஹால் பொய்கள், வஞ்சகம், ஊழல் ஆகியவற்றை அழித்து பேரழிவு இல்லாத (Aapda-free) டெல்லிக்காக மக்கள் பாடுபட்டுள்ளனர்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் கடந்த 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என வெளியிடப்பட்டது. ஆனால், கருத்து கணிப்பை தவறானது என்பது நிரூபணம் ஆகும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை பெற்றது. தற்போதைய நிலையில் பாஜக 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா போன்ற ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். 1998-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து அமித் ஷா கூறியதாவது:-
டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. டெல்லி மக்கள் இதயத்தில் பிரதமர் மோடி உள்ளார். ஷீஷ் மஹால் பொய்கள், வஞ்சகம், ஊழல் ஆகியவற்றை அழித்து ஆப்டா இல்லாத (Aapda-free) டெல்லிக்காக மக்கள் பாடுபட்டுள்ளனர். நாட்டு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருபவர்களுக்கு இதுதான் உதாணரம் என டெல்லி பாடம் கற்பித்துள்ளது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.