வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி
- டெல்லி மாநிலத்தின் அனைத்து துறையின் வளர்ச்சியையும் பாஜக உறுதி செய்யும்.
- டெல்லி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம். இது எங்களுடைய வாக்குறுதி
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டமன்றத்திற்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை பெற்றது.
மதியம் 2.45 மணி நிலவரப்படி பாஜக 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஏறக்குறைய இதுதான் இறுதி முடிவாக இருக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஒன்றிரண்டு இடங்களில் மாற்றம் ஏற்படலாம்.
இதனால் 1998-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் தலைநகர் மாநிலமான டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.
பாஜக ஆட்சியை பிடித்த நிலையில் பிரதமர் மோடி வெற்றி குறித்து கூறியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த டெல்லி சகோதர மற்றும் சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன். இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதில் நாங்கள் பணிவும் பெருமையும் அடைகிறோம். டெல்லி மாநிலத்தின் அனைத்து துறையின் வளர்ச்சியையும் பாஜக உறுதி செய்யும். டெல்லி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம். இது எங்களுடைய வாக்குறுதி. இதை நிறைவெற்றும் வரை ஓயமாட்டோம். விக்சித் பாரத்தில் டெல்லியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.
டெல்லி தேர்தலில் வெற்றி பெற உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாஜக-வினர் மேலும் தீவிரமாக உழைத்து டெல்லி மக்களுக்கான சேவை செய்வோம்.
இவ்வாறு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.