சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 107 ஆண்டு சிறை தண்டனை
- ரூ.4.50லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
- அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6.5 ஆணடுகள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஈழவதிருத்தி கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் என்ற மோகனன். 60 வயது முதியவரான இவர் 11 வயது சிறுவனை ஆள் இல்லாத நேரத்தில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் அந்த சிறுவனை கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
இது தொடர்பான புகாரில் பொன்னானி போலீசார் தாமோதரனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு விசாரணை பொன்னானி விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் தாமோதரனுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 107 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி சுபிதா சிரக்கல் தீர்ப்பு கூறினார்.
மேலும் அவருக்கு ரூ.4.50லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அதனை செலுத்த தவறினால் தாமேதரன் மேலும் 6.5 ஆணடுகள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.