இந்தி முழு நாட்டையும் ஒற்றுமையின் நூலில் இணைக்கும் - மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர்
- சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன
- இந்தியாவுக்கு 'தேசிய மொழி' என எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி திணிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
அவரது பதிவில், "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,
இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.
ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் "இந்தி இதயப்பகுதிகள்" அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.
இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு குறித்து பேசிய மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "சிலர் தங்களது அரசியல் ஆசைகளை நிறைவேற்ற அரசியல் கருத்துக்களை கூறுகிறார்கள். இந்தியாவின் தேசிய மொழியான இந்தி, நிச்சயமாக முழு நாட்டையும் ஒற்றுமையின் நூலில் இணைக்கும்" என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கு 'தேசிய மொழி' என எதுவும் இல்லை எனும் நிலையில், மத்திய அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது