இந்தியா
null

திடீர் கோளாறால் முடங்கிய இஸ்ரோவின் 100வது மிஷன்.. போராடி சக்சஸ் செய்த விஞ்ஞானிகள் - என்ன நடந்தது?

Published On 2025-02-03 16:13 IST   |   Update On 2025-02-03 16:14:00 IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜனவரி 29 ஆம் தேதி தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஜி.எஸ்.எல்.வி.எப்-15 [GSLV-F15] என்று பெயரிடப்பட்ட இந்த 100வது ராக்கெட் அன்றைய தினம் காலை 6.23 மணிக்கு ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டது.

என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலைத் தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ராக்கெட் மூலம் புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட நிலையில் அதன் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாக இஸ்ரோ இன்று காலை தெரிவித்தது.

 

செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான ஆக்சிடரைசரை ஏற்கும் வால்வுகள் திறக்கப்படாததால், செயற்கைக்கோளை ஒரு புவிவட்டப் பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இருப்பினும் பூமியைச் சுற்றி உள்ள நீள்வட்ட பாதையான ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட் (GTO) சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் பழுது இல்லாமல் நிலை கொண்டிருந்த நிலையில் அதை நீள்வட்ட சுற்றுப்பாதையிலிருந்து புவிவட்ட சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது. மாற்று வழியை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் மிஷன் தோல்வி அடையாளம் என்றும் கூறப்பட்டது.  

இந்நிலையில் இதுகுறித்து மீண்டும் இஸ்ரோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் சிறப்பாகச் செயல்பட்டன. புவிவட்ட சுற்றுப்பாதையைத் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அடைய முடியாது என நினைத்தோம்.

ஆனால், மாற்றுவழியில் மிக துல்லியமாக செயற்கைக்கோள் புவிவட்ட சுற்றுப்பாதையை அடைந்துள்ளது. செயற்கைக்கோளில் உள்ள சூரிய பேனல்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

அதிலிருந்து அதிகப்படியான மின்சாரம் உற்பத்தியாகிறது. இதன் மூலம் செயற்கைக்கோளுக்கும் இஸ்ரோ மையத்துக்குமான தொடர்பு வெற்றிகரமாக நிறுவப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News