செல்போன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் மட்டுமே செய்யப்படுகிறது- ராகுல் காந்தி
- பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது
- இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரதமர் கொண்டு வந்தார். அது நல்ல யோசனை என்று நினைக்கிறேன். 2014-ல் 15.3% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, இன்று 12.6% ஆகக் குறைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் உற்பத்தியில் இது தான் மிக குறைவானதாகும். இதற்காக நான் பிரதமரைக் குறை கூறவில்லை, அவர் முயற்சிக்கவில்லை என்று கூறுவது நியாயமாக இருக்காது. பிரதமர் முயற்சி செய்தார் ஆனால் அவர் தோல்வியடைந்தார் என்று என்னால் கூற முடியும்
சீனா இந்த இடத்தில் இந்தியாவை விட குறைந்தது 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளது. சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் ஆகியவற்றில் வேலை செய்து வருகிறது. நாம் பின்தங்கியுள்ளோம்.
உற்பத்தி துறையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவுக்கு சென்று விட்டன. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. செல்போனின் அனைத்து பாகங்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் அசம்பிள் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது.
இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது
இந்தியாவும் உற்பத்தியில் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தால், அமெரிக்க அதிபரின் பதிவியேற்பு விழாவிற்கு நமது பிரதமரை அழைக்க வேண்டும் என்பதற்காக நாம் நமது வெளியுறவு அமைச்சரை அனுப்ப மாட்டோம். மாறாக அமெரிக்க அதிபர் இங்கு வந்து நமது பிரதமரை அழைத்திருப்பார்" என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே "வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து இப்படி பேசக் கூடாது" என அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார்.