கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்தது
- கும்பமேளாவிற்கு 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடினர்.
- இன்று ஒரே நாளில் 48 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் என மாநில அரசு தெரிவித்தது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 48 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் திங்கட்கிழமை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கும்பமேளாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ராஜ்யசபா எம்.பி. சுதா மூர்த்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நீராடினர்.
அதேபோல, நடிகைகள் ஹேமமாலினி மற்றும் அனுபம் கெர், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், நடன இயக்குனர் ரெமோ டிசோசா உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர்.