இந்தியா (National)

உமர் அப்துல்லா மீண்டும் காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார்

Published On 2024-10-08 07:11 GMT   |   Update On 2024-10-08 07:11 GMT
  • தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
  • 5 நியமன எம்.எல்.ஏ.க்கள் குறித்து வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் சட்ட சபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா கந்தர்பால் மற்றும் புட்காம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.

புட்காம் தொகுதியில் 7 சுற்றுகள் முடிவில் உமர் அப்துல்லா 8612 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தார். சுந்தர்பால் தொகுதியில் 7 சுற்றுகளில் 5958 ஓட்டுகள் கூடுதல் பெற்றுள்ளார்.

இதற்கிடையே உமர் அப்துல்லா கூறும்போது, ஜம்மு-காஷ்மீர் வாக்காளர்கள் என்ன முடிவு எடுத்தாலும் பிற்பகலில் தெளிவாகிவிடும். தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு எதிராக இருந்தால் அக்கட்சி குறுக்குவழியில் ஈடுபடக் கூடாது.

5 நியமன எம்.எல்.ஏ.க்கள் குறித்து சில வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த இடங்களை நிரப்ப கவர்னருக்கு அதிகாரம் இல்லை என எங்கள் வக்கீல் ஒருவர் கூறியுள்ளார் என்றார்.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டி யிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜனதா 26, மெகபூபாவின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி-3, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு-2, மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு-1 இடத்தில் முன்னிலையில் உள்ளன. சுயேட்சை 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார். அவர் 2009 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 6 ஆண்டுகள் காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவி வகித்து இருந்தார்.

Tags:    

Similar News