இந்தியா

பீகார் தேர்தலுக்கு பிறகு நிதிஷ்குமார் அணி மாறுவார்- பிரசாந்த் கிஷோர் கணிப்பு

Published On 2025-03-06 08:01 IST   |   Update On 2025-03-06 09:13:00 IST
  • இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவார்.
  • எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், முதல்-மந்திரி பதவி கிடைக்கும் அளவுக்கு அவருக்கு தொகுதிகள் கிடைக்காது.

பாட்னா:

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், உடல் அளவில் களைத்துப்போய் விட்டார். மனதளவில் ஓய்வு பெற்று விட்டார். அவரது மந்திரிகளின் பெயர்களைக் கூட அவரால் சொந்தமாக சொல்ல முடியாது. நிதிஷ்குமார் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. அதனால் அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தயங்குகிறது. அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சவால் விடுக்கிறேன்.

இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவார். ஆனால், தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து அணி மாறிவிடுவார். ஆனால், எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், முதல்-மந்திரி பதவி கிடைக்கும் அளவுக்கு அவருக்கு தொகுதிகள் கிடைக்காது. நிதிஷ்குமாரை தவிர, யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆவார்கள் என்பதை எழுதியே தருகிறேன். நான் சொல்வது நடக்காவிட்டால், பிரசாரம் செய்வதையே விட்டு விடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News