இந்தியா

கைத்துப்பாக்கி வைத்திருந்த கைகளில் மடிக்கணினி: காஷ்மீரில் ராஜ்நாத் சிங் பேச்சு

Published On 2024-09-08 14:50 GMT   |   Update On 2024-09-08 14:50 GMT
  • ராம்பன் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து ராஜ்நாத் சிங் பேசினார்.
  • ஸ்ரீநகரில் மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்த யாரும் துணிவதில்லை என்றார்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

அங்குள்ள ராம்பன் தொகுதியில் தேசிய மாநாடு கட்சியின் அர்ஜுன் சிங் ராஜுவுக்கு எதிராக பா.ஜ.க.வின் ராகேஷ் சிங் தாகூர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் ராகேஷ் சிங் தாகூரை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

2019 -ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பாதுகாப்பு சூழ்நிலைகளால், இளைஞர்கள் கைத்துப்பாக்கிகள், ரிவால்வர்களுக்கு பதிலாக மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள்.

தற்போது ஸ்ரீநகரில் மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்த யாரும் துணிவதில்லை. இது தொடர்வதற்கும், ஜம்மு காஷ்மீரில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் பா.ஜ.க.வை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

2014-ல் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசின் செயல்திறன் குறித்து சொல்ல விரும்புகிறேன்.

பொருளாதாரத்தில் 11-வது இடத்திலிருந்த இந்தியா வேகமாக முன்னேறியது.

ஓர் அரசு சுமூகமாக இயங்குவதற்கு பிரதமர், முதல் மந்திரிகள் பதவிகளில் திறமையான, வலுவான துடிப்பு கொண்ட நபர்கள்தான் தேவை.

2019-ம் ஆண்டுக்கு முன், காஷ்மீரில் பயங்கரவாத சூழல் நிலவியது. ஆனால், இன்று யாரும் கைத்துப்பாக்கியை எடுக்கவோ, துப்பாக்கிச்சூடு நடத்தவோ துணிவதில்லை. இது ஒரு வலுவான தலைவர் ஆட்சியில் இருப்பதன் விளைவாகும்.

தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீர் நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாகவும், நவீன மாநிலமாகவும் உருவெடுக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News