இந்தியா

பெங்கால் எரிந்தால் அசாம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லியும் எரியும்- எச்சரிக்கும் மம்தா

Published On 2024-08-29 01:19 GMT   |   Update On 2024-08-29 01:19 GMT
  • பெண் டாக்டர் கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். குற்றவாளியை தூக்கிலிட நாங்கள் விரும்புகிறோம்.
  • ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு உருவாக்காதது ஏன்?

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இந்த சம்பவத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.

அதேநேரம் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசை, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார். ஆனால் சட்டம் கொண்டு வராமல், பா.ஜனதாவினர் முழு அடைப்பு நடத்தியதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணியின் 27-வது நிறுவன தினத்தையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

மேற்குவங்க மாநிலம் எரிந்தால் அதன்பின் அசாம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் எரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எங்கள் அரசுக்கு எதிராக பிரதமர் மோடியும், பா.ஜனதாவும் கடந்த 2014-ம் ஆண்டு முதலே சதியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில அரசை சீர்குலைக்க எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

பெண் டாக்டர் கொலைக்கு எதிராக போராடும் டாக்டர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கவில்லை.

இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் இருக்கிறது. எனவே நோயாளிகளின் துயரை கருத்தில் கொண்டு, டாக்டர்கள் படிப்படியாக பணிக்கு திரும்ப வேண்டும்.

பெண் டாக்டர் கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். குற்றவாளியை தூக்கிலிட நாங்கள் விரும்புகிறோம். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு உருவாக்காதது ஏன்?

என்னிடம் அதிகாரம் இருந்தால், ஒரு வாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவேன்.

அடுத்த வாரம் சட்டசபை தொடரை நடத்தி, கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கும் மசோதாவை நிறைவேற்றுவோம். பின்னர் அதை கவர்னருக்கு அனுப்பி வைப்போம். அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காவிட்டால், கவர்னர் மாளிகைக்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்துவோம்.

நாங்கள் இந்த முழு அடைப்பை ஆதரிக்கவில்லை. நாங்கள் இந்த தினத்தை அந்த டாக்டருக்கு அர்ப்பணிக்கிறோம். நாங்கள் நீதி கேட்கிறோம், பா.ஜனதா முழு அடைப்பை நடத்துகிறது. பிணத்தின் மீது அரசியல் செய்கிறது.

மணிப்பூரில் நடந்த சம்பவங்களுக்காக பதவி விலகாத பிரதமர் மோடிக்கு எதிராகத்தான் முதலில் முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Tags:    

Similar News