இந்தியா

உத்தரபிரதேசத்தில் பிரபல யூடியூப்பர் கைது

Published On 2024-05-28 08:50 GMT   |   Update On 2024-05-28 08:50 GMT
  • பாபி கட்டாரியா போன்ற புரோக்கர்கள் மூலம் வேலை வாய்ப்புக்காக பெண்கள் உட்பட சுமார் 150 இந்தியர்கள் மனித கடத்தல் மூலம் அந்த நிறுவனத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
  • அங்கிருந்து தப்பித்து இந்திய தூதரகத்துக்கு சென்று மீண்டும் இந்தியா வந்து கட்டாரியா மீது போலீசில் புகார் கொடுத்தோம் என்றனர்.

லக்னோ:

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பல்வந்த் கட்டாரியா என்ற பாபி கட்டாரியா. இவர் யூடியூப் சேனல் வைத்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்.

இந்த நிலையில் பாபி கட்டாரியா மீது அருண் குமார், மணீஷ் தோமர் ஆகிய 2 வாலிபர்கள் போலீசில் புகார் செய்தனர். தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, பாபி கட்டாரியாவின் யூடியூப் சேனலில் வெளிநாட்டில் வேலை செய்வது குறித்த விளம்பரத்தைப் பார்த்து அவரை அணுகினோம். அவர் கேட்ட பணத்தை கொடுத்தோம். பின்னர் லாவோஸ் நாட்டுக்கு செல்ல டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினார். நாங்கள் லாவோஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது, அபி என்பவர் எங்களை சந்தித்தார். அவர் தன்னை பாபி கட்டாரியாவின் நண்பர் என்றும் மற்றும் ஒருவர் பாகிஸ்தான் முகவர் என்றும் கூறினார்.

பின்னர் நாங்கள் ஒரு சீன நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு எங்களை கடுமையாக தாக்கி, பாஸ்போர்ட்டை பறித்தனர். அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக இணைய மோசடி செய்ய வேண்டி கட்டாயப்படுத்தினர்.

அந்த வேலை செய்யாவிட்டால், இந்தியாவுக்குத் திரும்ப முடியாது என்றும், இங்கேயே கொல்லப்படுவோம் என்றும் மிரட்டினர். பாபி கட்டாரியா போன்ற புரோக்கர்கள் மூலம் வேலை வாய்ப்புக்காக பெண்கள் உட்பட சுமார் 150 இந்தியர்கள் மனித கடத்தல் மூலம் அந்த நிறுவனத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

நாங்கள் அங்கிருந்து தப்பித்து இந்திய தூதரகத்துக்கு சென்று மீண்டும் இந்தியா வந்து கட்டாரியா மீது போலீசில் புகார் கொடுத்தோம் என்றனர். இதையடுத்து பாபி கட்டாரியா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News