பாகிஸ்தான் வெளியேறியது திட்டமிட்ட சதி- பாக், முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா
- பாகிஸ்தான் பலம் குன்றிய வங்கதேசத்தை தான் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டு இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி இருக்க வேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி தாங்கள் எதிர்கொண்ட முதல் போட்டியில் நியூசிலாந்து இடமும் அடுத்த போட்டியில் இந்தியாவிடமும் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது.
பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பில்டிங் என அனைத்துமே சொதப்பியதுதான். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அதிக அளவு டாட் பால்களை சந்தித்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுநர்களும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சித்து வந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா மட்டும் ஐசிசியை விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இது போல் அட்டவணை அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் பலம் குன்றிய வங்கதேசத்தை தான் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டு இருக்க வேண்டும். வங்கதேசம் தற்போது நன்றாக விளையாடி வந்தாலும் நமது வீரர்களுக்கு கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும்.
ஆனால் முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி நாம் தோல்வியை தழுவி விட்டோம். இதன் மூலம் கடும் நெருக்கடி நமது வீரர்களுக்கு ஏற்பட்டு விட்டது. பாகிஸ்தான் அணி ஏன் வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியை விளையாடவில்லை.
குறைந்தபட்சம் இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி இருக்க வேண்டும். அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் இரண்டு அணிகளுக்குமே சமமான அளவில் கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் என்று ரமீஷ் ராஜா கூறியுள்ளார்.