சாம்பியன்ஸ் டிராபி: வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா? ட்விஸ்ட் வைத்த ரோகித்
- டி20-யை விட இது வித்தியாசமான ஃபார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன்.
- நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் அபாரமாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார். அந்த தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று அசத்தினார்.
இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி வித்தியாசமான திறமையைக் கொண்டுள்ளதாகவும் அதனாலேயே அவரை இங்கிலாந்து தொடரில் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வருண் சக்கரவர்த்தி ஏதோ ஒரு வித்தியாசமான விஷயத்தை அவருக்குள் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறோம். அதே சமயம் டி20-யை விட இது வித்தியாசமான ஃபார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன்.
தற்போது நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை. ஒருவேளை வருண் இங்கு நன்றாக விளையாடினால் பின்னர் நாங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
என்று ரோகித் கூறினார்.
இதனால் இங்கிலாந்து தொடரில் வருண் சக்கரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.