CSK VS MI: சேப்பாக்கத்தில் நாளை மகாயுத்தம்.. வெல்லப்போவது யார்?
- கடந்த முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐந்தாவது இடத்தில் மட்டுமே நிறைவு செய்தது.
- முதுகு காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா, தடை விதிக்கப்பட்டதால் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை.
ஐபிஎல் 2025 சீசன் போட்டிகள் இன்று கொல்கத்தாவில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது. ஆர்சிபி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடி வருகின்றன.
இதற்கிடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது. சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டிக்கு தற்போதிருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
டோனிக்கு இப்போது 43 வயதாவதால் சிஎஸ்கே அணியில் இதுவே அவரின் கடைசி சீசன் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐந்தாவது இடத்தில் மட்டுமே நிறைவு செய்தது.
எனவே இந்த முறை தனது குறைகளை களைந்து வெற்றி அணியாக சிஎஸ்கே உருவெடுக்குமா என்று ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.
இதற்கு சாதகமாக அஸ்வின், நூர் அகமது, ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சிஎஸ்கேவின் பட்டாளத்தில் புதிதாக களமாடுகின்றனர். டோனியின் அனுபவமும், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜின் முடிவுகளும் இந்த முறை ஆட்டத்தை வென்றெடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நாளைய ஆட்டத்தை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் முதுகு காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா, தடை விதிக்கப்பட்டதால் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை. சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்த உள்ளார்
இந்த முறை சிஎஸ்கே அணியை தங்களால் வீழ்த்த முடியும் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா விளையாடாதது குறித்து பேசிய சூர்யகுமார், "ஹர்திக் விளையாடவில்லை என்றாலும் அவர் எங்களுடனேயே உள்ளார்.
அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை சேர்ப்பது சாத்தியமற்றது. அணியின் மற்ற வீரர்கள் அவரின் வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்று தெரிவித்துள்ளார். மொத்தத்தில் நாளை சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.