கிரிக்கெட் (Cricket)

துபாயில் ஆடுவதால் சாதகமா? இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதிலடி

Published On 2025-03-08 11:27 IST   |   Update On 2025-03-08 11:27:00 IST
  • நாங்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஆடுகளங்கள், போட்டியின் போது விளையாடும் ஆடுகளங்கள் வேறுபட்டவை.
  • அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதாக இல்லை.

துபாய்:

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டது.

ஒரே மைதானத்தில் (துபாய்) விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமானது என்று கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள், மைக் ஆதர்டன், நாசர் உசேன் கூறி இருந்தனர். இதேபோல ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சும் ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு உகந்தது என்று தெரிவித்து இருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி போட்டி முடிவில் இந்த விமர்சனங்களுக்கு பயிற்சியாளர் காம்பீர் பதிலடி கொடுத்து இருந்தார். அதே நேரத்தில் ஒரே மைதானத்தில் ஆடுவது உதவிகரமாக இருப்பதாக வேகப்பந்து வீரர் முகமது சமி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் துபாயில் மட்டும் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை என்று பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷீ கோடக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியா போட்டிகளில் வெற்றி பெறுவதை பார்த்த பிறகு, ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக இருப்பதாக பலரும் உணர்கிறார்கள். அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. போட்டியில் வெற்றி பெறுவதற்கு அன்றைய நாளில் அணிகள் நன்றாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். நன்றாக விளையாடி வெற்றி பெற்றால், சாதகமாக இருக்கிறதா? இல்லையா? என்று பேச வேண்டிய அவசியமே இருக்காது.

துபாயில் தங்கி பயிற்சி மேற்கொள்வதாலோ அல்லது அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுவதாலோ எங்களுக்கு ஆதாயம் இருப்பதாக நினைக்கவில்லை. நாங்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஆடுகளங்கள் வித்தியாசமானவை, போட்டியின் போது விளையாடும் ஆடுகளங்கள் வேறுபட்டவை. அது அனைவருக்கும் தெரியும். அதனால் எங்களது அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதாக இல்லை.

இவ்வாறு கோடக் கூறினார்.

Tags:    

Similar News