தமிழ்நாடு

ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆய்வு

Published On 2023-02-15 13:50 IST   |   Update On 2023-02-15 13:50:00 IST
  • மக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
  • பட்டா மாறுதல் தொடர்பாக ராஜம்மாள், கோமதி என்ற மாற்றுத்திறனாளிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து அதை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சேலம்:

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்தார். அவர் ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். மேலும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், வட்ட வழங்கல் துறையின் சார்பில் உள்ள கடைகள், பொருட்கள் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக முதியோர், விதவை உதவித்தொகை குறித்தும் கேட்டறிந்தார்.

பட்டா மாறுதல் தொடர்பாக ராஜம்மாள், கோமதி என்ற மாற்றுத்திறனாளிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து அதை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் அலுவல் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். அரசின் சமூக நலத்திட்டங்கள் ஓமலூர் வட்டத்தில் எத்தனை மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News