தமிழ்நாடு (Tamil Nadu)

மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி?

Published On 2024-09-26 06:11 GMT   |   Update On 2024-09-26 06:48 GMT
  • சுப்ரீம் கோர்ட் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உள்ளது.
  • ரூ.25 லட்சம் பிணைத்தொகை செலுத்தி செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள், வெவ்வேறு அமைச்சருக்கு மாற்றி வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்திவைத்தார்.

செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கமான ஜாமின் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தனக்கு ஜாமின் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவரால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கடிதம், முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை கவர்னர் ஆர்.என்.ரவி. ஏற்றுக்கொண்டார்.

ஜாமின் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணையின்போது புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமின் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்து இருந்தது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை முடிந்து 37 நாட்களுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா மற்றும் ஏ.ஜி.மாசி ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் இளங்கோ கூறுகையில்,

15 மாதங்களுக்கு மேலாக வெறும் விசாரணை குற்றவாளியாக இருப்பதால் ஜாமின் வழங்கப்பட்டது. அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக எந்த கட்டுப்பாடும் தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை என்று கூறினார்.

சுப்ரீம் கோர்ட் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

சாட்சிகளை கலைக்கக்கூடாது. வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.

ரூ.25 லட்சம் பிணைத்தொகை செலுத்தி செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய கட்டுப்பாடுகள் போன்று, செந்தில் பாலாஜிக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால், அவர் மீண்டும் அமைச்சராவார் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்று பரபரத்துக்கொண்டிருக்கும் வேளையில், அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மீண்டும் இடம் பிடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News