நீலகிரியில் ஏப்.2-ந் தேதி முழு அடைப்பு போராட்டம்- மாவட்ட அனைத்து சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
- இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
- ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.
ஊட்டி:
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், விவசாயிகள், ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு சங்கங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பிறகு அனைத்து சங்கங்களின் கூட்டு குழுவினர் கூறியதாவது:-
இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல், நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டமும், ஏப்ரல் 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.