பெண்கள் இனியும் இந்த வக்கிரவாதிக்கு ஆதரவு கொடுப்பதா என சிந்திக்கட்டும்- காங்கிரஸ் எம்.பி. சுதா
- பெண்கள் தொடர்பாக அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை சீமான் கூச்சமின்றி பேசியிருக்கிறார்.
- சீமானை ஆதரிக்கும் பிள்ளைகளை அவரின் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.
நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரானார்.
இதனிடையே, பாலியல் புகார் குறித்து சீமான் கொச்சையாக தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சீமானின் இத்தகைய பேச்சுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரீகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் சீமான். பெண்கள் தொடர்பாக பொதுவெளியில், அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார்.
முதலில் இந்த வழக்கு அரசியல்ரீதியான வழக்கு என்ற வாதமே பொய். சீமான் மீது ஒரு நடிகை புகார் தருகிறார்; நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கை ரத்து செய்யுங்கள் என சீமானேதான் நீதிமன்றம் சென்றார்.
விசாரணை முடிவில், புகாரில் முகாந்திரம் இருப்பதை அறிந்து 12 வாரத்திற்குள் விசாரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இப்போது நீதிபதிக்கும் உள்நோக்கம் கற்பித்துக் கொண்டிருக்கிறார் சீமான்.
சாமானிய மக்களுக்கான கடைசி நம்பிக்கையாக இப்போது வரை நீதிமன்றங்களும், நீதிபதிகளும்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மூலம் எதை சாதிக்க விரும்புகிறார் சீமான்?.
நீதிமன்ற அவமதிப்பெல்லாம் வராது என்ற உத்தரவாதம் எதுவும், எங்கிருந்தாவது கிடைத்ததா?
எல்லாவற்றிற்கும் மேல், வயசுக்கு வந்த பெண்ணையா கற்பழித்தேன் என பெண்களை சுற்றி உட்கார வைத்துக் கொண்டு எள்ளலான உடல் மொழியில் பேசியது. பெண்களுக்கு எதிரான வன்முறையை இயல்பான ஒன்றாகப் பார்க்கும், இயல்பான ஒன்றாக மாற்றும் வக்கிர புத்தி அதில் ஒன்றுமில்லை.
பெண்களைச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு பேசியதன் மூலம், சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறார் சீமான்?.
50%க்கு மேல் பெண்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு, பெண்மையைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார் சீமான். தமிழ்ச்சமூகத்தில் இடம் கொடுக்கப்படாமல் அவர் விரட்டப்பட வேண்டும்.
பெரியார் தொடர்பில் ஆதாரமின்றி அவதூறாக சீமான் பேசிய போது, அவர் எங்கள் Theme Partner என்று சொன்ன தமிழிசை சௌந்தரராஜன் இப்போது என்ன சொல்லப் போகிறார்?. Theme Partnerன் கருத்தை ஆதரிக்கிறாரா?
அவர் பேசிய பேச்சுகள், எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பெண்கள், அந்தக் கட்சியை ஆதரிக்கும் பெண்கள் இனியும் இந்த வக்கிரவாதிக்கு ஆதரவு கொடுப்பதா என சிந்திக்கட்டும்.
சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது" என்று பதிவிட்டுள்ளார்.