அரசு ஊழியர்கள் வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிப்பார்களா?- அமைச்சர் பெரியசாமி விளக்கம்
- 2023ல் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது.
- தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 54 பயனாளிகளுக்கு, ரூ. 54 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக ஸ்கூட்டர்களை அமைச்சர் இ.பெரியசாமி இன்று வழங்கினார். இதில் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நகர் ஊரமைப்பு துறை சார்பில் ரூ. 4.75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை மாற்று திறனாளிகள் நலத்துறை உள்பட ஆறு துறைகள் சார்பில் 257 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 87 லட்சத்து 10 ஆயிரத்து 885 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதன்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
பருவமழை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு சேம நிதியிலிருந்து முதலமைச்சரால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 400 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் 100 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 2023ல் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது. எந்த காலத்திலும் இப்படி வழங்கப்படவில்லை. இந்த அரசுதான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. விவசாயிகள் நம்பிக்கையோடு இருக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார். மிகச் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த 4 ஆண்டுகளாக பழைய பென்ஷன் திட்டம் நிறைவேற்றப்படாததால் வருகிற தேர்தலில் இப்பிரச்சினை எதிரொலிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த எதிரொலியும் வராது. காரணம் அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நம் முதல்வர் மீதும். ஆட்சி மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு என்றுமே தி.மு.க. பாதகமான முடிவை எடுக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.